underground Hezbollah drone facility in Majdal Zoun web
உலகம்

தொடரும் பதற்றம் | ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்.. லெபனானில் சுரங்கப் பாதை தகர்ப்பு!

லெபனான் நிலத்தடி சுரங்கத்தைத் தகர்த்த இஸ்ரேல் நடவடிக்கையால் எல்லைப் பதற்றம் மீண்டும் தீவிரமாகியுள்ளது.

PT WEB

போர்நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகும், தெற்கு லெபனானின் மஜ்தல் ஜோன் கிராமத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய நிலத்தடி சுரங்கப்பாதையை இஸ்ரேல் ராணுவம் வெடிகுண்டுகள் வைத்து தகர்த்துள்ளது. ஈரானிய தொழில்நுட்ப உதவியுடன் கட்டப்பட்ட இந்தச் சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான ஆயுதங்கள், ராக்கெட் லாஞ்சர்கள், ஏவுகணை ஏவுதளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்: m.மீரா

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் போர்நிறுத்த ஒப்பந்தம் (Ceasefire Agreement) முடிவானது. இந்த ஒப்பந்தத்தில் தெற்கு லெபனானின் சில பகுதிகளிலிருந்து இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படுவதாகவும், அதேவேளையில் லெபனான் இராணுவம் அங்கு நிற்பதற்கும் வகை செய்துள்ளது.

underground Hezbollah drone facility in Majdal Zoun

இந்நிலையில் போர்நிறுத்த விதிமுறைகளை மீறி, தெற்கு லெபனானில் உள்ள மஜ்தல் ஜோன் (Majdal Zoun) கிராமத்தில் இருக்கும் பிரம்மாண்டமான நிலத்தடி சுரங்கப்பாதையை இஸ்ரேல் ராணுவம் வெடிவைத்துத் தகர்த்துள்ளது. இந்த சுரங்கப்பாதை ஹிஸ்புல்லா அமைப்பால் பயன்படுத்தப்பட்டு வந்த பாதையாகும்.

இந்தச் சுரங்கப்பாதையைத் தகர்த்தது குறித்து இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலத்தடியில் இருக்கும் சுரங்கப்பாதையானது ஈரானிய தொழில்நுட்ப உதவியுடன் கட்டமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வான்வழித் தாக்குதல்களால் அழிக்க முடியாத அளவுக்கு வலிமையாக இருந்த இந்தச் சுரங்கத்திற்குள் இஸ்ரேலியப் பொறியியல் படையினர் நுழைந்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது இஸ்ரேலைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான அதிநவீன ஆயுதங்கள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் 4 ஏவுகணை ஏவுதளங்கள் (Launch Shafts) கண்டறியப்பட்டு, பின்னர் அவை வெடிபொருட்கள் மூலம் தரைமட்டமாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லாவின் பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழித்து, இஸ்ரேல் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்கள் மீதான தாக்குதலை தொடர்வோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.

underground Hezbollah drone facility in Majdal Zoun

இதுகுறித்து ஹிஸ்புல்லா அமைப்பு மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. தாங்கள் இதுவரை போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகப் பின்பற்றி வந்த நிலையில், இஸ்ரேல் தொடர்ந்து லெபனான் மீது கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது. இஸ்ரேலின் இத்தகைய அத்துமீறல்களை தாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தங்களின் தாய்நாட்டையும் மக்களையும் பாதுகாத்துக்கொள்ள தங்களுக்கு முழு உரிமை உள்ளது என்றும், இஸ்ரேலின் தாக்குதலுக்குத் தகுந்த நேரத்தில் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.