கடந்த மாதம் ஸ்பெயின் உச்ச நீதிமன்றம், முறையான சட்ட நடைமுறைகள் இன்றி கடல் வழியாக நாட்டுக்குள் வரும் புலம்பெயர்ந்தோரை உடனடியாகத் திருப்பி அனுப்பக்கூடாது என்றும், இது தரைவழியாக ஸ்பெயினுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோருக்குப் பொருந்தாது என்றும் தீர்ப்பு வழங்கியது.
ஆனால், இந்தத் தீர்ப்பு கடல் வழியாக ஸ்பெயினுக்குள் நுழைந்தால் அகதிகள் திருப்பி அனுப்ப மாட்டார்கள் என்று ஒரு வதந்தி பரவியது. இதனைத் தொடர்ந்து வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஸ்பெயின் நாட்டுக்குச் சொந்தமான ஃகியூட்டாவில் (Ceuta) மற்றும் (Melilla) மெலிலா ஆகிய பகுதிகளில் கடல் வழியாக அகதிகள் குவிந்தனர். சில நாட்களுக்குள் சுமார் 60 ஆயிரம் பேர் இந்த இரு பகுதிகளுக்கும் நுழைந்ததால், அது உலகளவில் மாபெரும் அகதிகள் இடம்பெயர்ந்த நிகழ்வாகப் பதிவானது.
இந்த இடப்பெயர்வின்போது கடலில் மூழ்கியும், கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேலியில் ஏற்பட்ட நெரிசலிலும் சிக்கி 35 பேர் உயிரிழந்ததாக ஸ்பெயின் அரசு உறுதிப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஃகியூட்டா, மெலிலா பகுதியில் நுழைந்தவர்களுக்குப் போதிய உணவை அளிக்காமல் அவர்களை ஸ்பெயின் பட்டினி போடுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. தற்காலிக முகாம்களில் உணவு மற்றும் தங்குமிட வசதிகளை உடனடியாக அனைவருக்கும் வழங்குவதில் தட்டுப்பாடு எழுகிறது என்பதை ஐ.நா அமைப்பும் உறுதி செய்துள்ளது.
அதோடு, தனது நாட்டுக்குள் நுழைந்தவர்களை ஸ்பெயின் பாதுகாப்புப் படையினர், கொடூரமான முறையில் உடனடியாக மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்புவதாக அம்னெஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இதனிடையே, இதுபோன்ற நிகழ்வுகளால் 5 முதல் 10 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும் ஸ்பெயினின் இந்த நடவடிக்கைகளுக்கு ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. ஐரோப்பாவில் கடந்த சில ஆண்டுகளாகவே அகதிகள் தஞ்சம் புகுவது அதிகரித்து வரும் நிலையில், இது அந்நாடுகளுக்கு பெரிய அளவிலான பிரச்னைகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.