இந்தியாவின் கப்பல்களுக்கு ஹார்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதி வழங்கியதாக IANS செய்தி வெளியிட்டுள்ளது. 'புஷ்பக்' மற்றும் 'பரிமல்' கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த அனுமதி குறித்து ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 50% முதல் 60% வரை வளைகுடா நாடுகள்தான் வழங்கி வந்தன. ஆனால் உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணைய் வழங்க ரஷ்யா முன்வந்ததால், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறைந்தது.
எனினும் அமெரிக்க பொருளாதார தடை காரணமாக மீண்டும் இந்தியா வளைகுடா நாடுகளில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணைய் இறக்குமதி செய்து வருகிறது. இதே போல இந்தியாவின் LPG சமையல் எரிவாயு இறக்குமதியில் 91% க்கும் மேல் வளைகுடா நாடுகளிடம் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.
இந்த சூழலில் அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச அளவில் 40 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹர்மூஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய், LPG சமையல் எரிவாயு இறக்குமதி பெரிய அளவில் முடங்கியுள்ளது.
இதனால் அந்த வழியே வரும் இந்திய கப்பல்களுக்கு அனுமதி வாங்க இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோர் இடையே தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்று இந்திய கொடியுடன் செல்லும் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக IANS நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் முதற்கட்டமாக 'புஷ்பக்' மற்றும் 'பரிமல்' ஆகிய இந்திய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்களை ஹார்முஸ் நீரினை வழியாக செல்ல ஈரான் அனுமதித்ததாகக் கூறப்படும் செய்திகளை ஈரான் நிராகரித்துள்ளதாக NDTV நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் இந்தியா அல்லது ஈரானின் உயர் அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவித்தால் மட்டுமே இந்த செய்தி உண்மையானதா ? அல்லது தவறானதா என்பது தெரியவரும்.