ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் 4 வாரத்தை கடந்திருக்கும் சூழலில், மத்திய கிழக்கில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது. அதேசமயம், சுமுகமாக நடைபெற்ற ஈரான் பேச்சுவார்த்தை காரணமாக 10 நாட்களுக்கு ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தப்போவதாக டிரம்ப் தெரிவித்திருக்கிறார். ஆனால், ஈரான் வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவுடன் எந்தவொரு நேரடிப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. டிரம்பின் கூற்றுக்கள் அப்பட்டமான பொய் என்றும், இது அமெரிக்காவின் பலவீனத்தையே காட்டுவதாகவும் ஈரான் விமர்சித்துள்ளது. இதற்கிடையில் தான், போரை நிறுத்தப் போவதாக அறிவித்திருந்தாலும், கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை மேற்காசிய நாடுகளுக்கு அமெரிக்க அனுப்பவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தொடர்ந்து, மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் ராணுவ பலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப் பேசியுள்ளார். அதாவது, “தனது சொந்த ராணுவத் தளங்களிலேயே தன் வீரர்களைப் பாதுகாக்கும் திறன் கூட இல்லாமல், அவர்களை ஹோட்டல்களிலும் பூங்காக்களிலும் பதுக்கி வைத்திருக்கும் அமெரிக்காவால், எங்கள் மண்ணில் அவர்களை எப்படிப் பாதுகாக்க முடியும்?" எனத் தெரிவித்திருக்கிறார்.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து காலிபாஃப் இவ்வாறு பேசியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தாக்குதல் அச்சம் காரணமாக அமெரிக்க வீரர்கள் தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக வெளியான செய்திகளை ஈரான் தரப்பு கிண்டல் செய்துள்ளது. அமெரிக்கா இப்பிராந்தியத்தில் தனது தலையீட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும், ஈரானின் எல்லைக்குள் அமெரிக்கப் படைகள் நுழைந்தால் அவர்களுக்குப் பாதுகாப்பு இருக்காது எனவும் ஈரான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.