ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஈரான் அதிகாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்தச் செய்தியை ஈரான் இன்னமும் உறுதி செய்யவில்லை
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஈரான் அதிகாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த மாதம் 28-ஆம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இதையடுத்து, ஈரான் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. இரு தரப்புக்குமான போர் 25 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஈரானுடனான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருப்பதாகவும், எனவே 5 நாட்களுக்கு ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 23-ம் தேதி அறிவித்தார். ஆனால், அமெரிக்காவுடன் எத்தகைய பேச்சுவார்த்தையிலும் தாங்கள் ஈடபடவில்லை என ஈரான் மறுத்தது.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நட்பு நாடுகள் என்ற அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளின் கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஈரான் அதிகாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் புரட்சிகர காவல்படையின் கடற்படைத் தளபதி அலிரேசா தங்சிரி (Alireza Tangsiri) கொல்லப்பட்டதை இஸ்ரேல் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொல்லப்பட்டவர் ஈரானின் கடற்படைப் பிரிவின் முக்கிய தளபதிகளில் ஒருவராவார் என்றும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் இவர் என்று இஸ்ரேல் தரப்பு தெரிவிக்கிறது.
கடந்த சில வாரங்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேசக் கப்பல்களைச் சிறைபிடித்தது மற்றும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு இவரே முக்கிய மூளையாகச் செயல்பட்டார் என்று இஸ்ரேலிய அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ஈரான் தரப்பிலிருந்து இதுவரை இதற்குப் முறைப்படியான உறுதிப்படுத்தல் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.