ஈரான் போரின் தாக்கம்.. மருத்துவமனை, மருந்து பில்கள் விலை உயரும் அபாயம்!
ஈரானில் நடந்து வரும் போரின் காரணமாக இந்தியாவின் மருத்துவ துறையில் மருந்து மற்றும் மருத்துவமனை பில்கள் உயரும் அபாயம் உள்ளது. முக்கிய வர்த்தகப் பாதைகளில் தடை ஏற்படுவதால், மூலப்பொருட்கள் இறக்குமதியில் தாமதம் ஏற்பட்டு, செலவுகள் அதிகரிக்கின்றன. இது நோயாளிகளின் செலவுகளை நேரடியாக பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவின் மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்துத் துறைகள், மூலப்பொருட்கள், செயல்மிகு உட்பொருட்கள் மற்றும் சிறப்பு மூலப்பொருட்கள் ஆகியவை பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகிறது.
ஈரானில் நடந்து வரும் போரின் தாக்கத்தால் மற்ற எல்லாத் துறைகளையும் போலவே இந்தியாவின் சுகாதாரத் துறையும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று அஞ்சப்படுகிறது. வளைகுடாவில் நடந்து வரும் போர் 4 வாரங்களாக நீடிக்கும் நிலையில், மேலும் நீடித்தால் மருத்துவ விநியோகச் சங்கிலிகளை அதிகமாக இறுக்கும் என்று துறை சார்ந்தவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஹார்முஸ் ஜலசந்தி போன்ற கப்பல் போக்குவரத்துப் பாதைகள் நீண்ட காலத்திற்குத் தடைபட்டிருந்தால், இந்த நெருக்கடி காலப்போக்கில் நோயாளிகளின் மருந்து மற்றும் மருத்துவமனை பில்களை உயர்த்தும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவின் மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்துத் துறைகள், பிளாஸ்டிக் மற்றும் இடைநிலை இரசாயனங்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள், சிறப்பு மூலப்பொருட்கள் ஆகியவை பெரும்அளவில் இறக்குமதி செய்யபப்டுகிறது. முக்கிய வர்த்தகப் பாதைகளில் ஏற்படும் தாமதங்கள், அதிக சரக்குக் கட்டணங்கள் மற்றும் எரிசக்தி பற்றாக்குறை ஆகியவற்றால், சுகாதார நிறுவனங்களுக்கான அடிப்படை செலவு அதிகரித்து வருகிறது. ஊசிகள், கையுறைகள், வடிகுழாய்கள் மற்றும் பிற நுகர்பொருட்கள் போன்ற பொருட்களின் உற்பத்தியாளர்கள், விநியோகத்திற்கான கால அவகாசம் அதிகரிப்பதாகவும், செலவுகள் உயர்வதாகவும் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
தற்போது இது அன்றாட சேவைகளைப் பாதிக்கவில்லை, ஆனால் இந்தப் போர் மருத்துவ துறை மீது மறைமுக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்கிறார் ப்ளூம் IVF நிறுவனத்தின் IVF ஆலோசகரும் நிபுணருமான ரோஹன் பால்ஷேத்கர்.
அவர் பேசுகையில், "நாங்கள் தற்போது மூலப்பொருட்கள், மருத்துவ சாதனங்கள் மற்றும் சில உயர்தர உபகரணங்களை இறக்குமதி செய்வதையே நம்பியிருப்பதால், கொள்முதல் செய்வதற்கான செலவுகள் அதிகரிக்கக்கூடும். தற்போதுள்ள கையிருப்பு காரணமாக நோயாளிகளுக்கான கட்டணங்கள் இதுவரை உயரவில்லை என்றும், ஆனால் இந்தப் போர் தொடர்ந்தால் செலவுகள் அதிகரிக்கக்கூடும், இது நோயாளிகளை நேரடியாகப் பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார் .

