iran reuters
உலகம்

”வளைகுடா மின் இணைப்பைத் துண்டிப்போம்..” - அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!!

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கினால், அதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளின் மின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வோம் என ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Premkumar S

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலுக்குப் பிறகு, மத்திய கிழக்கில் தொடங்கிய போர் பதற்றம் இன்னும் தணியவில்லை. போரை முடிவுக்குக் கொண்டு வர பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதிலும், இரு தரப்பும் தொடர்ந்து மிரட்டல் மற்றும் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், அப்பகுதியில் நிலவும் பதற்றம் நீடித்து வருகிறது.

iran, usa

இதற்கிடையில் தான், கடந்த வாரம் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது கூட்டுத்தாக்குதல் நடத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாகவும் அதற்கான இறுதி திட்டங்கள் தயாராகி வருவதாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், வளைகுடா நாடுகளின் கோரிக்கையை ஏற்று இந்த தாக்குதல் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்தச்சூழலில் தான், ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள் மீது அமெரிக்க தாக்குதல் நடத்தினால், வளைகுடா மின் இணைப்பைத் துண்டிப்போம் என தெரிவித்ததுடன், திட்டமிடப்பட்டுள்ள இலக்குகள் குறித்தான பட்டியல் இடம்பெற்றுள்ளதாகவும் ஈரான் அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளதாக ஏ.எஃப்.பி (AFP) ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Hormuz

ஈரான், ஈராக், குவைத், கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மின் வலையமைப்புகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், ஈரான் தனது மின் இணைப்புகளை துண்டித்தால், அண்டை நாடுகளிலும் மின் விநியோக பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஒரு ஈரானிய பாலம் அல்லது மின் நிலையம் அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடியாக “கண்ணுக்கு கண்” என்ற கொள்கையின்படி தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.