ஈரான் - அமெரிக்கா போர் pt web
உலகம்

6 மாத ஈரான் போர்.. 38,000 பேர் உயிரிழப்பு.. அகதிகளான 42 லட்சம் மக்கள்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது ஒருங்கிணைந்த ராணுவத் தாக்குதல்களைத் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் போர் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கலாம்.

Rishan Vengai

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப் படைகள் தொடங்கிய போர் ஆறு மாதங்களை கடந்த நிலையில், 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, 42 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாகத் துயரம் அனுபவிப்பது போன்ற மனிதாபிமான பேரழிவு உருவாகியுள்ளது. பெண்கள், குழந்தைகள் அதிகமாக பலியான இந்தப் போர், மின் நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் அழிவால் 210 பில்லியன் டாலர் இழப்பை ஈரானுக்கு ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து தொடங்கிய போர் 6 மாதங்களை நிறைவு செய்துள்ள நிலையில், மத்திய கிழக்குப் பகுதியே பேரழிவைச் சந்தித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் ஈரானில் 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் 40 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். 42 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாகத் தவிக்கின்றனர். 15 லட்சம் பேர் அண்டை நாடுகளான ஈராக், துருக்கி மற்றும் அஜர்பைஜானில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அமெரிக்க தூதரகம்

அமெரிக்க-இஸ்ரேல் படைகள் 14 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஈரான் தரப்பில் 4 ஆயிரத்து 800 ஏவுகணைகள், 6 ஆயிரன் ட்ரோன்கள் அமெரிக்க நிலைகள், அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது வீசப்பட்டுள்ளது. போரினால் ஈரானின் 60 சதவீதத்துக்கும் அதிகமான மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணைய் சுத்திகரிப்பு ஆலைகள் அழிக்கப்பட்டுள்ளன. ஈரானுக்கு 210 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் தினந்தோறும் 100 வணிக கப்பல்கள் சென்று வந்த நிலையில் போரினால் வெறும் 7 கப்பல்கள் மட்டுமே செல்கின்றன. கப்பல்கள் மீது 70 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

போரினால் அமெரிக்காவுக்கு 37 புள்ளி 5 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 135 டாலராக உயர்ந்து, உலகப் பொருளாதாரம் பெரும் மந்தநிலையை நோக்கிச் செல்கிறது.