\
Nepal flood
Nepal floodReuters

நேபாள வெள்ளத்திற்கு காரணம் யார்? - இந்தியா மீது பகீர் குற்றச்சாட்டு

பெருவெள்ள பாதிப்புக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இதுகுறித்து சர்வதேச அமைப்புகளில் முறையிட்டு இழப்பீட்டை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் அந்நாட்டு அமைச்சர் பேசியிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
Published on
Summary

இமயமலையில் திபெத் பகுதியில் பனிப்பாறை சரிவு காரணமாக நேபாளத்தின் கோஷி ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, ஆயிரக்கணக்கானோர் மாயமான நிலையில், மீட்புப் பணிகளில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டன. காலநிலை மாற்றம், பனிப்பாறை உருகுதல், பசுமைக்குடில் வாயு உமிழ்வு ஆகியவை பேரிடருக்குக் காரணம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி, நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் உள்ள திபெத் பகுதியில், இமயமலையில் பனிப்பாறை சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக நேபாளத்தின் போதே கோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல மீட்டர் உயரத்திற்கு நீர் பெருக்கெடுத்து பாய்ந்ததில், வெள்ளத்தில் சிக்கி இதுவரை 1,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 4,000 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நேபாள பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான மீட்புப் பணிகளில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவ முன்வந்தன. ஆரம்பத்தில் வெளிநாட்டு தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களின் உதவியை நேபாளம் ஏற்கவில்லை.

நேபாளம் வெள்ளம்
நேபாளம் வெள்ளம்Reuters

அதற்குப் பதிலாக நிதியுதவி உள்ளிட்ட உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டது. பின்னர், ஏற்பட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த குறிப்பிட்ட மீட்பு மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியை நேபாள அரசு ஏற்றுக்கொண்டது. இமயமலையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாகவே இந்த திடீர் வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்தப் பேரிடருக்கான முழுமையான காரணம் குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பனிப்பாறைகள் வேகமாக உருகுவதற்கும், இமயமலைப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களுக்கும் காலநிலை மாற்றம் ஒரு முக்கிய காரணியாக இருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கானல் கூறியதாவது: “நாம் உருவாக்காத ஒரு உலகளாவிய நெருக்கடிக்காக நாம் உச்சகட்ட விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதும், இதுபோன்ற பேரிடர்களின் அபாயம் அதிகரிப்பதும் கவலைக்குரியதாக உள்ளது. இதற்கு புவி வெப்பமயமாதல் முக்கிய காரணமாகும்.

Nepal Flood
Nepal FloodReuters

உலகின் மிகப்பெரிய பசுமைக்குடில் வாயு உமிழும் நாடுகளில் சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் அடங்கும். காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நேபாளம் போன்ற நாடுகளுக்கு, அதிக அளவில் பசுமைக்குடில் வாயுக்களை வெளியிட்ட நாடுகள் பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.அவர்களிடம் இருந்து உதவி மட்டுமல்ல, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை நேபாளம் சர்வதேச மன்றங்களில் முழுமையான உறுதியுடனும் தெளிவுடனும் எழுப்பும்” என்று அவர் தெரிவித்துள்ளார். நேபாள அமைச்சரின் இந்தக் கருத்து, சர்வதேச அளவில் விவாதத்தைஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com