முகமது ரெசா நக்தி  Iran watch
உலகம்

ட்ரம்ப் ஆட்சிக்காலம் வரை போர் நீட்டிக்கக்கூடும்.. அதிர்ச்சி அளித்த ஈரான் அதிகாரி!!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதவிக்காலம் முடியும் வரை, அந்நாட்டுடனான போரை ஈரான் வேண்டும்மென்றே தொடரக்கூடும் என ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் மூத்த ஆலோசகர் முகமது ரெசா நக்தி தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Premkumar S

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத்தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் தொடங்கிய போர் 5 மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதேசமயம், இருநாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சு வார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தச்சூழலில் தான், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதன்காரணமாக அந்நாட்டின் மீதான தாக்குதலை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகின்றன.

Iran - America War

ஆனால், இதற்கு மாறாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையான IRGC-யின் மூத்த ஆலோசகர் முகமது ரெசா நக்தி, இந்தப் போர் நீண்ட காலம் தொடரக்கூடும் என தெரிவித்திருக்கிறார்.

PBS நியூஸ் ஹவர் என்ற ஊடகத்திற்கு சமீபத்தில் பேட்டி அளித்த அவர், அமெரிக்காவுக்கு எதிரான இந்த நீண்டகால போர் மூலம் எதிரிகளைச் சோர்வடையச் செய்து, எதிர்காலத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்த நினைக்கும் நாடுகளுக்கு அதற்கான விலையை உணர்த்துவதே எங்களின் நோக்கம் எனவும் அமெரிக்க ராணுவம் தாங்கள் முன்பு கருதிய அளவுக்கு வலிமையானதாக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஈரான் தற்போது தினசரி பயன்படுத்துவதைவிட அதிகமான ஏவுகணைகளை உற்பத்தி செய்து வருவதாக தெரிவித்த அவர், போர் பல ஆண்டுகள் நீடித்தாலும், வெவ்வேறு இடங்களில் ஏவுகணைகளை உற்பத்தி செய்து தொடர்ந்து தாக்குதல் நடத்த முடியும். ஒருவேளை ஈரானிடம் ஏவுகணைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டாலும், உலகம் முழுவதும் உள்ள அமெரிக்காவின் பொருளாதார நலன்களை குறிவைக்கும் திறன் தங்களுக்கு இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். ஆனால், எந்தெந்த இலக்குகளை குறிப்பிடுகிறார் என்பது குறித்து அவர் குறிப்பிட்ட விளக்கம் எதையும் அளிக்கவில்லை.

இவ்வாறு, இரு நாடுகளுக்கு இடையே ஒரு அமைதி உடன்பாட்டை எட்டுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் வர்த்தகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.