ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே 1 மாதத்திற்கு மேலாக தொடர்ந்து வந்த நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் 2 வாரங்களுக்கு ஈரானுடனான போரை நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். தொடர்ந்து, நிரந்தப் போர் நிறுத்ததுக்கான பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் தான், ட்ரம்பின் கருத்தை உறுதிசெய்திருந்தது ஈரான். இதனால், மத்திய கிழக்கில் தற்சமயம் அமைதி திரும்பியிருக்கிறது.
முன்னதாக, போர் நிறுத்ததுக்கான 10 நிபந்தனைகள அமெரிக்காவிடன் ஈரான் முன்வைத்த நிலையில், அவை பரிசீலிக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். 10 நிபந்தனைகளில் ஒன்றான, லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்பதாகும், ஆனால் இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதையடுத்து அதிபர் மசூத் பெஷேஷ்கியான் லெபனான் மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதல்கள், அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயல். இஸ்ரேலின் இத்தகைய தொடர் தாக்குதல்கள் நடைபெறுமானால், வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றதாகிவிடும். எங்கள் மீண்டும் துப்பாக்கியைத் தூக்கத் தயங்காது எனத் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், பாகிஸ்தானில் நேற்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை, ஒரு நாள் தாமதமாக இன்று நடைபெறுகிறது. இதற்காக, ஈரான் மற்றும் அமெரிக்கா தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக் குழுக்கள் பாகிஸ்தான் வந்துள்ளன. இந்த சூழலில் தான், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம், ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவினால் என்னவாகும்; மாற்றுத் திட்டம் (பிளான் பி) உள்ளதா என கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த ட்ரம்ப், அமெரிக்காவிடம் மாற்றுத் திட்டமென்று எதுமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஈரானுக்கு மாற்றுத் திட்டம் எதுவும் தேவையில்லை. அவர்களின் ராணுவம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஈரானிடம் குறைவான ஏவுகணைகளே உள்ளன. நாம் அவர்களை மிகக் கடுமையாக தாக்கியுள்ளோம். நமது இராணுவம் அற்புதமானது; அவர்கள் ஆற்றிய பணி மகத்தானது எனக் கூறியிருக்கிறார். தொடர்ந்து, ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் தொடரும் எனவும், எங்களுடன் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், ஈரான் இதுவரை கண்டிராத மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" எனவும் தெரிவித்திருக்கிறார்.