மேற்காசியாவில் அமெரிக்கா-ஈரான் மோதலால் பதற்றம் நீடிக்கும் நிலையில், கத்தார் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மூன்று ஈரான் போர் விமானிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டெஹ்ரான் கோரியுள்ளது. சு-24 விமானங்கள் வீழ்த்தப்பட்டபோது கைது செய்யப்பட்ட ஜாவேத், தாஷ்தியான், உம்ரான் ஆகியோர் ஆறு மாதங்களாக தடுப்புக் காவலில் உள்ளதாக ஈரான் குற்றம் சாட்ட, கத்தார் இதை மறுக்கிறது.
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
கத்தார் நாட்டின் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தங்கள் நாட்டைச் சேர்ந்த மூன்று போர் விமானிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் மேற்காசியாவில் நீடித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்காசியாவில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தியது. குறிப்பாக, அந்நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் ஈரானின் முக்கிய இலக்குகளாக இருந்தன.
இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் மாதம் கத்தாரிலும் ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. அப்போது ஈரான் நாட்டைச் சேர்ந்த சில போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியானது. அந்த விமானங்களை இயக்கிய ஈரான் விமானிகளில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் காணாமல் போனதாகவும் அப்போது ஈரான் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஈரானின் ஆயுதப்படைப் பிரிவு தலைவர் முகம்மது பகிர்சதே, செஞ்சிலுவைச் சங்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், போரின்போது சு-24 ரக போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகவும், அவற்றில் இருந்த மூன்று ஈரான் விமானிகளை கத்தார் படையினர் கைது செய்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜாவேத், தாஷ்தியான் மற்றும் உம்ரான் என அடையாளம் காணப்பட்ட அந்த மூன்று விமானிகளும் சுமார் ஆறு மாதங்களாக கத்தார் தடுப்புக் காவலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஈரான் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டை கத்தார் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. மூன்று ஈரான் விமானிகளும் தங்கள் காவலில் இல்லை என தெரிவித்துள்ள கத்தார், பிராந்திய பதற்றத்தை குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நேரத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
மேலும், ஈரான் விமானிகள் கத்தார் வான்வெளிக்குள் எல்லை மீறி நுழைந்தது தொடர்பாக அவர்களைத் தொடர்புகொண்டு எச்சரித்ததாக கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.