அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய மோதலால், உலகின் 20% கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகமும், சர்வதேச வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தச் சூழலில்தான், பாகிஸ்தான் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தம் காரணமாக, மோதலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமெரிக்காவும் ஈரானும் கடந்த ஜூன் 14ஆம் தேதி ஒப்புக்கொண்டன. இதையடுத்து, 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் கடந்த 18ஆம் தேதி பிரான்ஸின் வெர்சாய்ஸ் அரண்மனையில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் ஈரான் மீதான கடல்வழித் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. இதனால் முக்கியப் பகுதியான ஹார்முஸ் நீரிணை வழியாக சர்வதேச எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து தடையின்றித் தொடங்கியுள்ளது.
மேலும், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்காக இரு நாடுகளுக்கும் 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியும் ஒப்புதல் அளித்துள்ளார். அதேநேரத்தில், இந்த ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் தனது அதிருப்தியை வெளிக்காட்டியது. தவிர, இந்த உடன்படிக்கை ஈரானுக்கு மிகவும் சாதகமாக இருப்பதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒருதரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
இத்தகைய அரசியல் குழப்பங்களுக்கு இடையே, துணை அதிபரின் பயணத் தாமதம் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தனது முதல் அதிகாரப்பூர்வ கருத்தை வெளியிட்டுள்ளார். ஒப்பந்தம் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாகவே இந்த ஒப்பந்தத்தை முடித்துவிட வேண்டும் எனத் தவித்தார்; அதற்காகத் தன்னிடம் இருந்த அனைத்து வழிகளையும், அழுத்தங்களையும் பயன்படுத்தினார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் உரிமைகளும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என அதிபர் பெசெஷ்கியான் உறுதியளித்த பிறகே இந்த ஒப்பந்தத்துக்கு தான் சம்மதித்ததாக அவர் விளக்கியுள்ளார். மேலும், அமெரிக்காவுடன் இனி நடக்கும் நேரடிப் பேச்சுவார்த்தைகள் அவர்களின் கொள்கைகளை ஏற்பதாக அர்த்தமாகாது என்றும், அமெரிக்காஅதிகபட்ச கோரிக்கைகளை வைத்தால்,அவற்றை ஈரான் திட்டவட்டமாக நிராகரிக்கும் என்றும் மொஜ்தபா காமேனி எச்சரித்துள்ளார்.