செய்தியாளர் - M.மீரா
ஈரானுடனான தற்போதைய போரில், உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் ராணுவத்திற்கு எதிர்பாராத மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பெருமையாகக் கருதப்படும் அதிநவீன 'MQ-9 ரீப்பர்' (MQ-9 Reaper) ட்ரோன்களில் குறைந்தது 45 ஆளில்லா விமானங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவோ அல்லது செயலிழந்து போயுள்ளதாகவோ ராணுவத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஒட்டுமொத்த இழப்பின் மதிப்பு சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாகும் எனவும், மேலும், இது அமெரிக்க ட்ரோன் படையின் செயல்பாட்டுத் திறனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பொது பட்ஜெட் மற்றும் பாதுகாப்புத்துறைத் தரவுகளின்படி, இந்தப் போருக்கு முன்பு அமெரிக்காவிடம் சுமார் 185 MQ-9 ரீப்பர் ட்ரோன்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்ததாகவும், இவற்றில் சுமார் 165 ட்ரோன்களை அமெரிக்க விமானப்படையும், மீதமுள்ளவற்றை கடற்படையும் இயக்கி வந்ததாகவும், ஆனால், இந்தத் தொடர்ச்சியான இழப்புகளுக்குப் பிறகு, தற்போது செயல்பாட்டில் உள்ள ட்ரோன்களின் எண்ணிக்கை 135 ஆகக் குறைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த ட்ரோன்கள் அனைத்தும் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டவை அல்ல; சில விமானங்கள் தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாலும், தொழில்நுட்பக் கோளாறுகளாலும் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்ட இந்த MQ-9 ரீப்பர், உளவுத் தகவல் சேகரிப்பு, தொடர் கண்காணிப்பு மற்றும் துல்லியமான வான்வழித் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான ஆயுதமாகும். இதற்குமுன் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இவை முக்கி்யப் பங்காற்றியுள்ளன.
இதற்கிடையே, ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் மற்றொரு அமெரிக்க MQ-9 ட்ரோனைத் தங்களது புதிய அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது. இந்த ட்ரோன் பாரசீக வளைகுடா கடற்பகுதியில் விழுந்ததாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், இந்தத் தகவலை அமெரிக்கா உடனடியாக உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை. இது உண்மையானால் இழப்பு எண்ணிக்கை 45-ஐத் தாண்டும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்குப் பிறகும், தனது வான் பாதுகாப்பு கட்டமைப்பு இன்னும் வலுவாகவே செயல்படுகிறது என்பதை உலகுக்கு நிரூபிப்பதே ஈரானின் முக்கிய நோக்கமாகும். இந்த ட்ரோன் இழப்புகள் அமெரிக்காவிற்கு எதிர்கால ராணுவ நடவடிக்கைகளில் பெரும் சவாலாக மாறியுள்ளன.
முக்கியமாக, 2024-ஆம் ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து 31 MQ-9 ட்ரோன்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் ரீப்பர் ட்ரோன்களின் உண்மையான போர்க்களச் செயல்திறன் குறித்த கவனமும் உலகளவில் அதிகரித்துள்ளது. ஈரானின் வலிமையான வான் பாதுகாப்பை எதிர்கொண்டு, அமெரிக்கா தனது ட்ரோன் படையை எவ்வாறு மீண்டும் கட்டமைக்கும் என்பதே தற்போதைய கேள்வியாகும்.