boats in hormuz  Reuters
உலகம்

வளைகுடாப் போர் | ஹார்முஸில் அமெரிக்காவுக்கு ஈரான் அதிரடி பதிலடி!!

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா - ஈரான் நேரடி மோதல்: எண்ணெய் டேங்கர்கள், போர்க்கப்பல்கள், ட்ரோன் தாக்குதலால் உலகப் பொருளாதாரத்திற்கு புதிய அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம்.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்காவின் தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும், உலகப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான கடல்சார் பாதையான ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஈரான் தனது இராணுவ வலிமையையும் சவாலான நிலைப்பாட்டையும் மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. அமெரிக்கப் படைகள் ஈரானிய எண்ணெய் டேங்கர் கப்பல்களைத் தாக்கியதைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் தொடர்புடைய 6 வணிகக் கப்பல்கள், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மற்றும் ஒரு இராணுவ ட்ரோன் மீது ஈரான் கடுமையான பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

முன்னதாக அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் மூன்று எண்ணெய் டேங்கர் கப்பல்கள் கடுமையாகச் சேதமடைந்ததாக இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது. ஓமன் வளைகுடாவில் 'எம்டி கைலோ' (MT Kylo), ஹார்ஜ் தீவுக்கு (Harg Island) அருகே 'எம்டி டவுனி' (MT Downey) மற்றும் ஜாஸ்க் (Jask) பகுதிக்கு அருகே 'எம்டி ஸ்டார்க் 1' (MT Stark 1) ஆகிய கப்பல்களை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) இலக்கு வைத்தது.

இதில் இரண்டு கப்பல்கள் நிரந்தரமாகச் செயலிழக்கப்பட்டதாகவும், மூன்றாவது கப்பல் முழுமையாக அழிக்கப்பட்டதாகவும் வாஷிங்டன் உறுதிப்படுத்தியுள்ளது. Kharg தீவுக்கு அருகில் நடந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதுமில்லை என்று ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்த போதிலும், ஓமன் வளைகுடாவில் இருந்த இரு டேங்கர்களின் பணியாளர்கள் உயிர் காக்கும் படகுகள் (lifeboats) மூலம் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

Hormuz

இவ்வாறு ஈரானியக் கப்பல்கள் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, ஹார்முஸ் நீரிணையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் பிரம்மாண்டமான விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் ஏவுகணை அழிப்புக் கப்பல் (guided-missile destroyer) ஆகியவற்றைக் குறிவைத்து ஈரானின் புரட்சிகரப் படை பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இந்த ஏவுகணைகள் போர்க்கப்பல்களைத் தாக்கி சேதப்படுத்தியதால் அவை பின்வாங்க நேரிட்டதாக ஈரான் கூறியுள்ளது. ஆனால், ஏவுகணைகளிலிருந்து கப்பல்கள் தப்பியதாகவும் பணியாளர்களுக்குப் பாதிப்பில்லை என்றும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அன்று ஹார்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்ற அமெரிக்க இராணுவத்தின் ஆளில்லா மேற்பரப்பு விண்கலத்தையும் (Unmanned Surface Vessel / Drone) IRGC கடற்படை வெற்றிகரமாகத் தாக்கியதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானியத் துறைமுகங்களை முடக்கும் வாஷிங்டனின் எதிர்ப்பையும் மீறி, முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் தனது முழுமையான கட்டுப்பாட்டை ஈரான் நிலைநிறுத்தியுள்ளது.

தன்மீதான தாக்குதலுக்கு உடனடி எதிர்வினையாக, ஹார்முஸ் நீரிணையின் 'அங்கீகரிக்கப்படாத பாதையில்' பயணித்த 3 எண்ணெய் டேங்கர்கள் மற்றும் பிற பகுதிகளில் 'குழந்தைகளைக் கொல்லும் அமெரிக்காவுடன்' தொடர்புடைய 3 கப்பல்கள் என மொத்தம் 6 கப்பல்களைத் தங்கள் படைகள் தாக்கி முடக்கியதாக IRGC கடற்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

US ship at hormuz

ஈரானின் கூட்டு இராணுவத் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ஈரானின் கப்பல் போக்குவரத்தில் அமெரிக்கா தொடர்ந்து தலையிட்டால், அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் இனி வரும் நாட்களில் இன்னும் தீவிரமாகவும் கடுமையானதாகவும் இருக்கும்" என்று எச்சரித்துள்ளார்.

மேலும் ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பாகத் திறந்திருக்கும் என்ற வாஷிங்டனின் பொய்யான உத்தரவாதங்களை வணிகக் கப்பல்கள் நம்பக் கூடாது; அங்கீகரிக்கப்படாத வழிகளில் கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் தங்கள் சொந்த ஆபத்திலேயே பயணிக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் நேரடியாகக் குறிவைக்கப்படுவீர்கள்" என்று ஈரான் தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளது.

ஈரானை பொருளாதார ரீதியாக அழுத்துவதற்காக, அந்நாட்டுடன் நிதித் தொடர்பு கொண்ட அமைப்புகள் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. அதேசமயம், ஈரானிய துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்க நடவடிக்கைகள் தங்களது இறையாண்மைக்கு எதிரானவை என தெஹ்ரான் குற்றம்சாட்டுகிறது.

இந்நிலையில், எண்ணெய் டேங்கர்கள் மீதான தாக்குதல், போர்க்கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல், ட்ரோன் தாக்குதல் என மோதல் படிப்படியாக விரிவடைந்து வருகிறது. ஹார்முஸ் நீரிணை போன்ற முக்கியமான கடல் வழித்தடத்தில் இரு நாடுகளும் நேரடியாக மோதும் சூழல் உருவானால், அதன் தாக்கம் அமெரிக்கா மற்றும் ஈரானைத் தாண்டி உலகளாவிய பொருளாதாரத்தையே பாதிக்கும் அபாயம் உள்ளது.