மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில் கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் அயதுல்லா அலி காமேனி. 1989 முதல் 2026 வரை ஈரானின் ஒட்டுமொத்த அதிகாரமும் இவர் கையில் தான் இருந்தது. இந்தசூழலில் தான், கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இஸ்லாமிய சட்டங்களின்படி, இறந்தவர்கள் இறந்த 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றபோதிலும், வளைகுடா போர் 100 நாட்களை கடந்தும் நீடித்து வந்த நிலையில், கமேனியின் இறுதிச் சடங்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது .
இந்தசூழலில் தான், பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தம் காரணமாக கடந்த ஜூன் 17 அன்று, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்ததிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இதையடுத்து, மத்திய கிழக்கில் அமைதி திரும்பியிருக்கும் நிலையில், ஈரானின் முன்னாள் உச்சத்தலைவர் அயதுல்லா அலி காமேனி இறுதிச் சடங்கு குறித்தான அறிவிப்பை சமீபத்தில் ஈரான் வெளியிட்டது
அதன்படி, ஜூலை 4-ம் தேதி முதல் ஜூலை 9-ம் தேதி வரை தெஹ்ரான், கோம் மற்றும் மஷ்ஹத் ஆகிய நகரங்களில் அயதுல்லா அலி காமேனியின் இறுதி ஊர்வலம் நடக்கும் எனவும் ஜூலை 9ம் தேதி மஷ்ஹத் நகரில் உள்ள இமாம் ரெசா அவர்களின் புனித ஆலயத்தில் காமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தசூழலில் தான், மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எனினும், இந்த அழைப்பு குறித்து இந்தியா தரப்பில் இருந்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்கு இந்தியா இரங்கல் தெரிவித்ததோடு , வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஈரானியத் தூதரகத்திற்குச் சென்று, அரசின் சார்பில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டிருந்தது, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தனது ஈரானியப் பிரதிநிதியான சையத் அப்பாஸ் அராக்சியுடனும் தொலைபேசியில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.