உக்ரைன் போருக்கிடையில் அமெரிக்கா-ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்த நேரத்தில், மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் நடத்தும் துல்லியத் தாக்குதல்களுக்கு ரஷ்யாவின் செயற்கைக்கோள், உளவுத் தகவல் ஆதரவு இருக்கிறதா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.
செய்தியாளர் - M. மீரா
உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவும் சந்தித்த நிலையில், மத்திய கிழக்கில் ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களில் ரஷ்யாவின் மறைமுக பங்கு குறித்த சந்தேகங்கள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களில், அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் உளவு அமைப்புகள் துல்லியமாக குறிவைக்கப்படுவது, ரஷ்யா வழங்கும் செயற்கைக்கோள் மற்றும் உளவுத் தகவல்கள் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மார்ச் மாதத்தில் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் CIA தொடர்புடைய வசதிகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இவ்வளவு துல்லியமாக அமெரிக்க தளங்களை ஈரான் எப்படி அடையாளம் காண்கிறது? அமெரிக்க ராணுவத் தளங்கள் எங்கே இருக்கின்றன, எந்த விமானங்கள் எப்போது புறப்படுகின்றன, எந்த இலக்கை தாக்க வேண்டும், இப்படிப்பட்ட மிக முக்கியமான தகவல்களை ரஷ்யா, ஈரானுக்கு வழங்குகிறதா போன்ற கேள்விகள் தற்போது அமெரிக்க உளவுத்துறையை அதிர வைத்திருக்கிறது.
இதன்படி ஈரானின் சமீபத்திய தாக்குதல்களில் ரஷ்யாவின் பங்கு இருக்கிறதா என்பதை அமெரிக்க உளவுத்துறை ஆய்வு செய்து வருகிறது.
ஈரானிடம் ரஷ்யாவைப் போன்ற வலுவான விண்வெளி மற்றும் ராணுவ செயற்கைக்கோள் திறன்கள் இல்லை என்பதால், ரஷ்ய உதவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக பாரிஸில் உள்ள Sciences Po பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் இங்கே இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது.ஈரான் தனது நாட்டு உளவு வலையமைப்பையும் பல ஆண்டுகளாக வளர்த்து வருகிறது. அதாவது, ரஷ்யா உதவி இல்லாமலேயே அமெரிக்க ராணுவ நிலைகள் தொடர்பான தகவல்களை ஈரான் சேகரித்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ஈரான், ரஷ்யாவுக்கு Shahed ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கியதாக கூறப்பட்டது. அதேபோல், ஈரானின் Shahed-136 ட்ரோன்களில் ரஷ்யாவின் Kometa-M தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
ஈரான்–அமெரிக்க மோதல் ரஷ்யாவுக்கு சில வகையில் சாதகமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, இது உக்ரைன் போரில் இருந்து அமெரிக்காவின் கவனத்தைத் திசைதிருப்புவதுடன், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்களை அதிக அளவில் பயன்படுத்தச் செய்யக்கூடும்.
அதனால் அமெரிக்காவை எதிர்கொள்ளும் அளவுக்கு ஈரானுக்கு தேவையான செயற்கைக்கோள் தகவல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை ரஷ்யா மறைமுகமாக வழங்குகிறது என்று NBC செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த உளவுத் தகவல்கள், ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் அமெரிக்கத் தயாரிப்பு விமானங்கள் மற்றும் துல்லியமாக இலக்கைத் தாக்கும் ஆயுதங்களின் செயல்பாட்டை முடக்கவும் (jamming) உதவுகின்றன என்றும் அச்செய்தி கூறுகிறது.
இது உண்மை என நிரூபிக்கப்பட்டால், மத்திய கிழக்குப் போர் ஈரான் - அமெரிக்கா மோதல் என்ற நிலையில் இருந்து, உலக வல்லரசுகள் மோதும் மிகப்பெரிய போர்க்களமாக மாறக்கூடும்.