ஈரான் - அமெரிக்கா Pt web
உலகம்

"ஒன்று வெடித்தால் நான்கை தகர்போம்” - ட்ரம்புக்கு ஈரான் பதிலடி.!

ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மூன்று நாட்களில் வெடித்துச் சிதறக்கூடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையில், அதற்கு ஈரான் தற்போது பதிலடி கொடுத்திருக்கிறது.

Premkumar S

பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியன் மூலம் மத்தியக் கிழக்கில் போர் மூண்டது. அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உலகின் 20% சதவீத கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருக்கிறது. இதனால், உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில் தான், பாகிஸ்தானின் மத்தியஸ்தம் காரணமாக ஈரான் அமெரிக்கா இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டது. தொடர்ந்து, இருநாடுகளுக்கிடையே நேரடியான முதல்கட்ட பேச்சுவார்த்தை இந்த மாத தொடக்கத்தில் நடந்த நிலையில், எவ்வித முடிவுகளும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

ஈரான் - அமெரிக்கா போர்

தொடர்ந்து, இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தானும், அமெரிக்காவும் தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், ஈரான் ஹார்முஸ் பகுதியில் இருக்கும் அமெரிக்க முற்றுகையை நீக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு வரப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. இந்த சூழலில் தான், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”ஈரானில் உள்ள எண்ணெய் குழாய்கள் ஏதேனும் ஒரு காரணத்தால் மூடப்பட்டால் அது வெடித்துச் சிதறக்கூடும். வெடித்துச் சிதறும் எண்ணெய் கட்டமைப்புகளை முன்பு போல கட்டியெழுப்ப முடியாது” என எச்சரித்திருந்தார்.

இதையடுத்து, ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு ஈரானின் துணை ஜனாதிபதி இஸ்மாயில் சகாப் இஸ்ஃபஹானி பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ”எந்தவொரு போர் நடவடிக்கைக்கும் நாங்கள் பதிலடி கொடுப்போம். இந்த முற்றுகையின் விளைவாக, எண்ணெய் கிணறுகள் உட்பட எங்களின் எந்தவொரு உள்கட்டமைப்பும் சேதமடைந்தால், ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவளிக்கும் நாடுகளிலும் ஒன்றுக்கு 4 மடங்கு சேதம் ஏற்படும். எங்களிடம் கணக்கு போடுவதற்கு ஒரு வித்தியாசமான முறை உள்ளது. ஒரு எண்ணெய் கிணறு நான்கு எண்ணெய் கிணறுகளுக்குச் சமம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.