ஈரானுக்கும் இஸ்ரேல், அமெரிக்க படைகளுக்கும் இடையே நடைபெறும் போர் 2 வாரங்கள் தாண்டியும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தப் போருக்கு முன்னர் ஈரானின் ஏவுகணைகள் அதிகபட்சமாக 2,000 முதல் 2,500 கிலோமீட்டர் வரைதான் செல்லும் என்றே கணிக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள இலக்குகளே ஈரானின் தாக்குதலுக்கு இரையாகும் என கருதப்பட்டது.
ஆனால், முதல்முறையாக ஈரான் 2,000 கிலோமீட்டர்களை தாண்டி, 4 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுடைய இலக்குகளை நோக்கி தனது ஏவுகணைகளை ஏவி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நாடுகளுக்குச் சொந்தமான கூட்டுப் படைத் தளம் அமைந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போரில் இந்தத் தீவு அமெரிக்காவிற்கு மிகவும் பாதுகாப்பான ஓர் இடமாகக் கருதப்பட்டது. மிகவும் தொலைவில் இருப்பதால் இந்தத் தளத்தை ஈரானால் தாக்க முடியாது என்று கருதப்பட்ட நிலையில், அங்கிருந்துதான் அமெரிக்காவின் B-2 ரக குண்டுவீச்சு விமானங்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வந்தன.
இந்தச் சூழலில் ஈரான் இரண்டு நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை டியாகோ கார்சியா ராணுவ தளம் நோக்கி ஏவியுள்ளது. இதில் ஒரு ஏவுகணை நடுவானிலேயே செயலிழந்த நிலையில், மற்றொன்றை அமெரிக்கக் கடற்படையின் போர்க்கப்பல் SM-3 இடைமறிப்பு ஏவுகணை மூலம் தடுத்து அழித்தது.
இந்தத் தாக்குதலால் அந்தப் படைத்தளத்திற்குப் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், 4 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுடைய இலக்கைக்கூட ஈரானால் தாக்க முடியும் என்பது உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இந்த ஏவுகணையின் தாக்குதல் வரம்புக்குள் பாரிஸ், லண்டன் போன்ற நகரங்களும் வரும் என்பதால், ஈரானுக்கு எதிரான செயல்பாடுகளை குறைத்துக்கொள்ளும் கட்டாயம் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.