மசூத் பெசெஷ்கியான் - அகமது வாஹிதி Pt web
உலகம்

ஈரானில் ஆட்சியைப் பிடித்த இராணுவம்? உளவுத் துறை அமைச்சர் நியமனத்தில் மோதல்!

ஈரானின் முக்கிய நிர்வாக முடிவுகளில் ஐஆர்ஜிசி தற்போது முழுமையான கட்டுப்பாட்டை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

PT WEB

ஈரானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மசூத் பெசெஷ்கியான், அந்நாட்டின் சக்திவாய்ந்த இராணுவ அமைப்பான ஐஆர்ஜிசி எனப்படும். இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையால் ஓரம் கட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு ‘அமைதியான அதிகாரக் கைப்பற்றலாக' பார்க்கப்படுகிறது. நாட்டின் முக்கிய நிர்வாக முடிவுகளில் ஐஆர்ஜிசி தற்போது முழுமையான கட்டுப்பாட்டை எடுத்துள்ளது. குறிப்பாக, அதிபர் பெசெஷ்கியான் முன்மொழிந்த உளவுத்துறை அமைச்சருக்கான நியமனத்தை ஐஆர்ஜிசி தளபதி அகமது வாஹிதி நேரடியாகத் தலையிட்டுத் தடுத்துள்ளார்.

அகமது வாஹிதி

போர்க்கால சூழலைக் காரணம் காட்டி, பாதுகாப்பு தொடர்பான அனைத்து அதிகாரங்களும் தங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று இராணுவம் பிடிவாதம் பிடிப்பதாக கூறப்படுகிறது. மறுபுறம், உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனியின் உடல்நிலை மற்றும் இருப்பிடம் குறித்து மர்மம் நீடிப்பதும், அவருக்கும் அதிபருக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதும் இந்த அதிகாரப் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

அதிபரின் பல முடிவுகள் முடக்கப்பட்டுள்ளதால், ஈரானிய அரசாங்கம் தற்போது ஒரு 'செயலற்ற நிலைக்கு' தள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஈரானின் உண்மையான அதிகாரம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இல்லாமல், இராணுவத்தின் கரங்களுக்குச் சென்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.