ஈரான் தாக்குதலால் கத்தாரின் ராஸ் லஃப்பான் எரிவாயு மையம் பெரும் சேதமடைந்துள்ளது. இதனால் கத்தாரின் எல்.என்.ஜி உற்பத்தி 17% குறைந்துள்ளது. கத்தார் எனர்ஜி சி.இ.ஓ சாத் அல்-காபி, இது ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார். இந்தியா தனது எரிவாயு தேவையில் 50 சதவீதம் கத்தாரிலிருந்தே இறக்குமதி செய்கிறது.
அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் முடிவுக்கு வந்துவிடும், உலகநாடுகளின் எரிபொருள் பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 3 வாரங்களை கடந்து நடந்துவரும் இப்போர் மேலும் தீவிரமடைந்துவருகிறது. ஈரான் தொடர்ந்து வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதும், எரிசக்தி மையங்களை குறிவைத்து தகர்த்துவதும் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய எரிவாயு மையமான கத்தாரின் ராஸ் லஃப்பான் (Ras Laffan) மீது ஈரான தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் கத்தாரின் ஒட்டுமொத்த எல்.என்.ஜி உற்பத்தித் திறனில் 17 விழுக்காடு முற்றிலுமாக அழித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், சேதமடைந்த கட்டமைப்புகளைச் சீரமைக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து பேசியிருக்கும் கத்தார் எனர்ஜி நிறுவனத்தின் சி.இ.ஓ சாத் அல்- காபி, தனது மிக மோசமான கனவில் கூட இப்படி ஒரு தாக்குதலை தான் நினைத்துப் பார்த்ததில்லை எனவும், இது ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தில் பெரும் தட்டுப்பாட்டை உருவாக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்காசியாவில் உள்ள எரிசக்தி மையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் என்று இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், மேற்காசியாவில் உள்ள எரிசக்தி மையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்கமுடியாதவை என்று கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய எரிவாயு மையமான கத்தாரின் ராஸ் லஃப்பான் (Ras Laffan) மீது ஈரான் நடத்திய தாக்குதலால், இந்தியாவிற்கான எல்என்ஜி விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா தனது எரிவாயு தேவையில் 50 சதவீதம் கத்தாரிலிருந்தே இறக்குமதி செய்வது குறிப்பிடத்தக்கது.