மொஜ்தபா காமேனி web
உலகம்

ஈரான் உச்ச தலைவர் குறித்த தகவல்| ’உயிரோட தான் இருக்கார், ஆனா..’ யார் சொல்வது உண்மை.. ஈரானா? இஸ்ரேலா?

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்காரா? இல்லையா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி விவாதத்தை கிளப்பியுள்ளன..

PT WEB

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், அவரது மகன் மொஜ்தபா கமேனி அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டார். அவர் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்த முதல் நாளன்றே ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, சில நாட்களில், அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் அடுத்த உச்சத் தலைவராக அறிவிக்கப்பட்டர். இந்த நிலையில், எங்களது தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் உயிரிழந்திருக்கலாம் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூறி வந்தன. இந்த சூழலில்தான், மொஜ்தபா உயிருடன் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியதோடு, அவரது உடல்நிலை குறித்தும் முக்கிய தகவலும் வெளியாகியுள்ளது.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், ஓமனின் மத்தியஸ்தத்தில் 3 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்கா அளித்த அமைதித் திட்டத்தின் பெரும்பாலான அம்சங்களை ஈரான் ஏற்றுக்கொண்டதாக ஓமன் அறிவித்த அதே நாள் இரவுதான். அதாவது பிப்ரவரி 28ம் தேதி இரவில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தின. போர் தொடக்கத்திற்காக காத்திருந்த ஈரானும், உடனடியாக பதில் தாக்குதலை தொடங்கியது. கூடவே, அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு ராணுவ தளங்களை கொடுத்து உதவிய வளைகுடா நாடுகளையும் ஈரான் தாக்கியது மேலும் பரபரப்பை உருவாக்கியது.

அயதுல்லா அலி காமேனி, டொனால்ட் ட்ரம்ப்

இதற்கிடையில், போரின் முதல் நாள் தாக்குதலிலேயே ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி உட்பட முக்கிய தலைமை நிர்வாகிகளும் கொல்லப்பட்டார். அதுக்கடுத்து தலைவராக யார் நியமிக்கப்பட்டாலும், அவரும் கொல்லப்படுவார் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தன.

அதனை தொடர்ந்து ஈரானின் அடுத்த உச்ச தலைவராக மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டு மார்ச் மாதம் 8-ம் தேதி அறிவிக்கபட்டார், அறிவிக்கப்பட்ட நாள் முதல் இப்போது வரை அவரது பெயரில் அறிக்கைகள் வெளியாகி வந்தாலும் அவர் பொதுவெளியில் இதுவரை தோன்றவில்லை. இது பல சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பிய நிலையில் அவர் கோமா நிலையில் இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. ஈரான் மீது முதல் நாள் நடத்தப்பட்ட தாக்குதலில் மொஜ்தபாவும் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் கூறிவந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மொஜ்தபா காமேனி

இந்நிலையில், மொஜ்தபா உயிருடன் இருப்பதாகவும். ஆனால், அவரது முகம் சிதைந்து, அடையாளம் தெரியாத அளவிற்கு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், அவர் ஒரு காலை இழந்துவிட்டதாகவும், கல்லீரல் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனாலும், அவர் மனதளவில் தெளிவாகவே இருப்பதாகவும், தொலைபேசி வாயிலாக நாட்டின் முக்கிய நடவடிக்கைகளில் கலந்துகொண்டு வழிநடத்துவதாகவும் கூறப்படுகிறது. ஈரான் தரப்பிலிருந்து இந்த செய்திகள் குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.