indigo airlines
indigo airlines file image
உலகம்

24 மணி நேரம் விமான நிலையத்திலேயே காத்திருந்த தம்பதி.. இண்டிகோ ஏர்லைன்ஸின் அலட்சியத்தால் துயரம்!

யுவபுருஷ்

இந்தியாவைச் சேர்ந்த வயதான ஒரு தம்பதி, லண்டனில் இருந்து மும்பைக்கு விமானத்தின் மூலம் பயணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். 64 வயதான ராஜேஷ் ஷா மற்றும் 59 வயதான ராஷ்மி ஷா என்ற இந்த தம்பதி, உடல்நலக்குறைவு காரணமாக நடக்க முடியாத சூழலில் இருந்துள்ளனர்.

லண்டனில் இருந்து துர்கிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறிய அவர்கள் துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கிருந்து இண்டிகோவின் கனெக்டிங் ஃப்ளைட் மூலமாக மும்பைக்கு வர திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், போர்டிங் கேட்டில் அமரவைக்கப்பட்ட இந்த தம்பதி, தாங்கள் செல்ல இருந்த விமானம் குறித்த தகவல்களை அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரித்துள்ளனர். இதற்கு ஊழியர்கள், தங்களது அதிகாரி வந்து பதிலளிப்பார் என்று கூறியுள்ளனர். சில மணி நேரங்கள் கடந்த நிலையில், மீண்டும் கேட்டதற்கு அதே பதிலையே ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் பதட்டமான அத்தம்பதி, தங்களது மகளுக்கு ஃபோன் செய்து பேசியுள்ளனர். இதைத்தொடர்ந்து, விமான நிலைய உதவி எண் மூலம் உதவியாளர்களை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார் மகள் ரிச்சா. இருப்பினும் அவர்கள் சுமார் 24 மணி நேரம் காக்கவைக்கப்பட்டுள்ளனர்.

தொடர் புகார்களுக்குப் பின், அந்த மூத்த தம்பதி அடுத்த நாள் விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர். இதுகுறித்து பேசியுள்ள ரிச்சா, “என்னுடைய அம்மா அப்பாவுக்கு அவ்வப்போது மருத்துவ உதவி தேவைப்படும். அவர்களுக்கு வெறும் பிரட் மற்றும் கோக்கை கொடுத்து 24 மணிநேரத்திற்கு காக்க வைத்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

விமான ஊழியர்களின் அலட்சியத்தால் நடந்த இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுள்ளது.