உக்ரைன் போரில் இந்தியர் உயிரிழப்பு?
உக்ரைன் போரில் இந்தியர் உயிரிழப்பு? ட்விட்டர்
உலகம்

உக்ரைன் போரில் இந்தியர் உயிரிழப்பு? போர்க்களத்தில் பணிபுரியும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை...

கணபதி சுப்ரமணியம்

உக்ரைன் - ரஷ்யா யுத்தத்தில் ரஷ்ய ராணுவத்தில் உதவியாளராக பணியாற்றிய இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல் வந்துள்ள நிலையில், போர்க்களத்தில் பணிபுரியும் இந்தியர்களை மீட்க தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக இத்தகைய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் தெரிவித்துள்ளார். இந்திய அதிகாரிகளின் முயற்சியால் பல இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

wagner

ரஷ்ய ராணுவம் மற்றும் வாக்னர் தனியார் ராணுவம் ஆகியவற்றில் உதவியாளர்களாக பணிபுரியும் இந்தியர்கள் பலர் போர்க்களத்தில் ஆபத்துகளை சந்திக்கிறார்கள் என புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், குஜராத்தை சேர்ந்த ஹெமில் மங்குகியா என்ற இளைஞர் போர்க்களத்தில் உயிரிழந்துள்ளார் என அவரது குடும்பத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

சூரத் பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஹெமில் மங்குகியா ரஷ்யாவில் பணிபுரிந்து வருகிறார் என்பது மட்டுமே அவரது குடும்பத்திற்கு தெரியும் எனவும் ஆனால், அவர் என்ன பணிபுரிகிறார் என்பது தெரியாமல் இருந்தது எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மாதம் 2 லட்சம் ரூபாய் ஊதியம் கிடைக்கும் என்பதால் ஹெமில் மங்குகியா ரஷ்யா சென்றதாகவும், சென்ற புதன்கிழமை அவர் உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார் என தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஹெமில் மங்குகியா

இந்த தகவல் ரஷ்ய ராணுவத்துக்கு உதவியாளராக பணிபுரியும் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நபரின் குடும்பம் மூலமாக கிடைத்ததாக ஹெமில் மங்குகியாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய ராணுவம் அல்லது ரஷ்ய அரசோ தங்களுக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஹெமில் மங்குகியா உடலை மீட்டு தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்த போது இந்த விவகாரம் வெளியுறவுத் துறைக்கு தெரியவந்துள்ளது.

ஹெமில் மங்குகியா சென்ற வருடம் டிசம்பர் மாதம் முதல் ரஷ்ய ராணுவத்திற்கு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இடைத்தரகர்கள் மூலம் அவர் ரஷ்யா சென்ற நிலையில், அவர் என்ன பணிபுரிகிறார் மற்றும் யாருக்கு பணி புரிகிறார் போன்ற தகவல்கள் அவரது குடும்பத்துக்கு தெரியவில்லை.

Ukraine war

சென்ற வாரம் ஹெமில் மங்குகியா தொலைபேசியில் உரையாடியதாகவும் அப்போது அவர் நன்றாக இருந்தார் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா ராணுவம் மற்றும் வாக்னர் ராணுவம் ஆகியவற்றில் பல இந்தியர்கள் உதவியாளர்களாக பணிபுரிந்து வருவது தொடர்பான புகார்கள் குறித்து, பல தவறான தகவல்கள் வெளிவந்துள்ளதாக வெளியுறவுத்துறை கருதுகிறது. போர்க்களத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் பலர் தங்களை விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளதாக கூறுவது சரியான தகவல் அல்ல என ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். போர்க்களத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ரஷ்ய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

ரந்தீர் ஜெய்ஸ்வால்

ரஷ்யாவில் புகார் அளிக்கப்பட்டால் மாஸ்கோ நகரில் உள்ள ரஷ்ய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் இந்தியாவில் புகார் கிடைத்தால் டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் அவர் விளக்கினார். ரஷ்யாவில் ராணுவ உதவியாளர்களாக பணிக்குச் சென்ற இந்தியர்கள் இது தொடர்பாக எந்த தகவலையும் இந்திய அரசுக்கு தெரிவிக்கவில்லை என்பதால் வெளியுறவுத் துறையிடம் இது தொடர்பான முழு விவரங்கள் இல்லை. வெளிநாடுகளில் பணிபுரிய செல்லும் இந்தியர்கள் முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டாலும், பலரும் இந்த அறிவுரையை பின்பற்றுவதில்லை.

மேலும் இடைத்தரகர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்லும் போது, முறைகேடுகள் நடைபெறுவதால் இடைத்தகர்கள் யாருக்கும் தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என ஒட்டுமொத்த நடவடிக்கையும் ரகசியமாக வைத்திருக்க கட்டாயப்படுத்துகிறார்கள். அதிக அளவு பணம் விரைவாக ஈட்ட வேண்டும் என்ற ஆசையில், வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்பவர்கள் பலரும் இடைத்தரகர்களுக்கு பல லட்சங்கள் ரொக்கம் அளிப்பதுடன், முறைகேடுகள் குறித்து புகார் அளிப்பதையும் தவிர்க்கிறார்கள். பிரச்னை ஏற்படும் சமயத்தில் இடைத்தரகர்கள் தலைமறைவாகி விடுவதால், அப்போது மட்டுமே விவரங்கள் வெளிவருகின்றன.

Indians

இத்தகைய சூழலை தவிர்க்க வேண்டும் எனவும் வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்பவர்கள் முறைப்படி அனைத்து அனுமதிகளையும் பெற வேண்டும் எனவும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனவும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.