2020 ஆம் ஆண்டு COVID-19 தொற்றுநோய் பரவலின் போது சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை இந்தியா தடை செய்தது. 22,000 இந்திய மாணவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுத்த சீனாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சுற்றுலா விசாக்களை வழங்குவதை இந்தியா நிறுத்தியது.கடந்த ஐந்து ஆண்டுகளாக சீனர்களுக்கான சுற்றுலா விசா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையிலான மோதலால் எல்லையில் பதற்றம் நிலவியது. 1962-ம் ஆண்டுக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் சீர்குலைந்தது.
இந்தநிலையில், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்தும் நடவடிக்கையில், இருநாட்டு அரசும் இறங்கியுள்ளது. ரஷ்யாவின் கசன் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர். அப்போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த பல்வேறு முடிவுகள் எடுத்தனர். இந்தவகையில், ஜூலை 24 முதல் சீன குடிமக்கள் சுற்றுலா விசாக்களுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என்று சீனாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையே நேரடியாக விமான சேவைகளை மீண்டும் தொடங்க இந்த ஆண்டு தொடக்கத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. தற்போது, இருநாடுகள் இடையிலான எல்லைப் பிரச்னையில் ஓரளவு தீர்வு ஏற்பட்டுள்ளதை அடுத்து, சீனர்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
விசா குறித்து பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவுக்கான சுற்றுலா விசா பெறுவதற்கு சீன குடிமக்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். பிறகு குறிப்பிட்ட தேதியில் பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் குவாங்சோவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களில் தங்கள் பாஸ்போர்ட் மற்றும் தேவையான ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்கலாம்” என்று கூறியுள்ளது.