அண்டை நாடான வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில், நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் வங்கதேச உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்நாட்டில் உள்ள சில தலைவர்கள் பொதுவெளியில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பேசி வருகின்றனர். குறிப்பாக, ”வங்கதேசம் சீர்குலைக்கப்பட்டால், வடகிழக்கு மாநிலங்களைப் பிரித்து தனிமைப்படுத்துவோம்” என அந்நாட்டில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் கட்சியின் (என்சிபி) தலைவர் ஹஸ்னத் அப்துல்லா எச்சரித்திருந்தார். இதற்கு இந்தியா உடனே பதிலடி கொடுத்தபோதும், இது நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை நோக்கி சில கிளர்ச்சியாளர்கள் பேரணி நடத்த முயன்றனர். இதையடுத்து, இந்திய விசா விண்ணப்ப மையம் பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று மதியம் 2 மணி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று அந்நாட்டு இடைக்கால அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வங்கதேச உயர் ஆணையருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி தனது கவலையைத் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் வங்கதேச மக்களுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவை வலுப்படுத்தவே இந்தியா முன்னுரிமை அளிக்கும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.