iran war Reuters
உலகம்

தெஹ்ரானை தாக்கிய இஸ்ரேல்.. பற்றி எரிந்த எண்ணெய்க் கிடங்குகள்!

தெஹ்ரானிலும் அதைச் சுற்றியுள்ள பல எண்ணெய்க் கிடங்குகளையும் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கின. இதனால் பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டன. மேலும் வானத்தில் அடர்ந்த கரும்புகை பரவியது.

PT WEB

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் தெஹ்ரானில் ஐந்து முக்கிய எரிபொருள் கிடங்குகள் தீப்பிடித்து, நான்கு பேர் உயிரிழந்தனர். தீயை கட்டுக்குள் கொண்டுவந்தாலும், எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடுத்தன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் மீதான போரை பிப்ரவரி 28 அன்று ஏவுகணைத் தாக்குதலுடன் தொடங்கியது. முதல் நாளே ஈரான் உச்சபட்ச தலைவர் ஆயத்துல்லா காமெனி மற்றும் பிற உயர் இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனால் வெகுண்ட ஈரான், இஸ்ரேல் மீது ஏராளமான ஏவுகணைகளை ஏவியது.

ஈரான் தாக்குதல்

மேலும் மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் நிலைகொண்ட பல்வேறு நாடுகளிலும் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து வளைகுடா முழுவதும் பிராந்திய மோதல்கள் அதிகரித்தது. தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கேட்டிருந்தார். மறுபுறம், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் கொலைக்கு விலை கொடுக்க நேரிடும்" என ஈரான் மிரட்டல் விடுத்தது.

இந்நிலையில் ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் ஐந்து முக்கிய எரிபொருள் கிடங்குகளை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் குறிவைத்ததைத் தொடர்ந்து, தெஹ்ரானில் தீயுடன் கூடிய உயர்ந்த புகை மண்டலங்கள் எழுந்தன. இரண்டு டேங்கர் ஓட்டுநர்கள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக தேசிய ஈரானிய எண்ணெய்ப் பொருட்கள் விநியோக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

தெஹ்ரானிலும் அதைச் சுற்றியுள்ள பல எண்ணெய்க் கிடங்குகளையும் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்கின. இதில் வானளவுக்கு புகை மண்டலங்கள் எழுந்தன. அதே நேரத்தில் இந்த தீப்பிழம்பு மூலம் ஏற்பட்ட வெடிப்புகள் நகரத்தின் சில பகுதிகளை உலுக்கின. பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, இருப்பினும் சேதம் மதிப்பிடப்படாததால் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக தடைபட்டது. ஈரானின் எரிபொருள் சேமிப்பு பகுதிகளை தாக்கியதை இஸ்ரேலிய இராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது