மேற்காசியப் போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தைக்கான பாலமாகச் செயல்பட பல நாடுகள் இருக்கையில் பாகிஸ்தான் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்பதற்கு சில விளக்கங்கள் கூறப்படுகின்றன.
மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின. ஒரு மாதத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த தாக்குதல், தற்போது பாகிஸ்தான் மத்தியஸ்தன் செய்ததன் விளைவாக, 2 வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிறுத்தும்பட்சத்தில், ஈரான் 10 அம்ச கோரிக்கைகளை அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், மேற்காசியப் போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தைக்கான பாலமாகச் செயல்பட பல நாடுகள் இருக்கையில் பாகிஸ்தான் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்பதற்கு சில விளக்கங்கள் கூறப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் ஈரானுடன் இணக்கமான உறவு நிலவுவதே சமாதான முயற்சிகளுக்கு பாகிஸ்தான் தேர்ந்தெடுக்கப்படக் காரணம் என கூறப்படுகிறது. ஈரானுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் முட்டல்மோதல்கள் உள்ள நிலையில் பாகிஸ்தானுடன்தான் ஓரளவு இணக்கமான நிலை உள்ளது.
ஓமன், கத்தார் போன்ற நாடுகள் பிரபலமான மத்தியஸ்த நாடுகளாக கருதப்பட்டாலும் அங்கு அமெரிக்காவின் ராணுவ தளம் இருப்பதால் அவற்றை ஈரான் விரும்பவில்லை. தங்கள் தூதுக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த பாதுகாப்பான நாடாகவும் பாகிஸ்தானை ஈரான் கருதுகிறது. வாஷிங்டனில் ஈரானுக்குத் தூதரகம் இல்லாததால், 1979 முதல் ஈரான் தொடர்பான விவகாரங்களை பாகிஸ்தான் தூதரகம்தான் கவனித்து வருகிறது. இந்த நீண்டகால நம்பிக்கை பாகிஸ்தானைத் தகுதியான மத்தியஸ்தராக ஈரானைப் பார்க்கவைத்தது. மேலும் போர் காரணமாக உலகிலேயே மிகவும் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாகவும் பாகிஸ்தான் உள்ளது. போர் நீடித்தால் பாகிஸ்தான் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீர்குலையும் நிலை இருந்தது. மேலும் ஈரானில் போர் நீடித்தால் ஈரானில் இருந்து தங்கள் நாட்டுக்குள் லட்சக்கணக்கானோர் அகதிகளாக வருவார்கள் என்றும் இது நிரந்தர தலைவலியாக மாறிவிடும் என்றும் பாகிஸ்தான் அஞ்சியதாக கூறப்படுகிறது. இதுவும் பாகிஸ்தானை மத்தியஸ்தத்தை நோக்கித் தூண்டியதாகப் பார்க்கப்படுகிறது.