செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
உக்ரைனில் ரஷ்யா, பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளுடன் ட்ரோன்களையும் இணைத்து தாக்குதல் நடத்தி, உக்ரைனின் வான் பாதுகாப்பை குழப்பி வருகிறது. இதே உத்தியை ஈரானும் பின்பற்றுகிறது. கடந்த ஐந்து நாட்களில் ஜோர்டானில் உள்ள மூன்று அமெரிக்க தளங்களை குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் பல்வேறு ஏவுகணைகளை அலை அலையாக ஏவியது.
இதன் நோக்கம் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து, அதிக அளவில் பேட்ரியாட் ஏவுகணை தடுப்பான்களை பயன்படுத்தச் செய்வதாகும். மேலும், திடீரென திசைமாறக்கூடிய ஏவுகணைகளையும் ஈரான் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நான்கு நாட்களில் பெரும்பாலான ஏவுகணைகளை அமெரிக்கா தடுத்தது. ஆனால் ஜூலை 17ஆம் தேதி ஒரு ஈரானிய ஏவுகணை பாதுகாப்பை ஊடுருவி, அமெரிக்க வீரர்கள் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்பை தாக்கியது. இதில் மூன்று வீரர்கள் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல விமானங்களும் சேதமடைந்தன.
போரின்போது அமெரிக்கா 1,500-க்கும் மேற்பட்ட பேட்ரியாட் தடுப்பு ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளதாகவும், 1,700-க்கும் குறைவானவை மட்டுமே மீதமுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்திய தாக்குதல் முறைகளில் இருந்து ஈரான் பாடம் கற்றுக்கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானின் ஏவுகணை தளங்களை தாக்கியபோதும், அவற்றில் சிலவற்றை ஈரான் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
மேலும், ஈரான் தனது ராணுவ ஆயுதங்கள் மற்றும் முக்கியத் தலைவர்களை நிலத்தடியில் உள்ள ரகசிய இடங்களுக்கு மாற்றி வருவதாக கூறப்படுகிறது. அணுசக்தித் திட்டத்தின் சில பகுதிகள் ‘Pickaxe Mountain’ எனப்படும், மலையின் அடியில் 300 அடிக்கும் ஆழத்தில் உள்ள பாதுகாப்பான வளாகத்தில் பதுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனால் அமெரிக்காவுக்கு எதிரான போர் மேலும் சிக்கலாகி வருகிறது.