ஈரானுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், மத்திய கிழக்கில் அவ்வப்போது தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, ஏமனின் தலைநகர் சனா உள்ளிட்ட பகுதிகளை ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், தங்களுக்கு ஆதரவாக இருந்த ஆட்சியாளர்களை நீக்கிவிட்டதால், சவுதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. அதேசமயம், ஏமனின் மற்ற பகுதிகளையும் கைப்பற்ற ஹவுதிக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்தச்சூழலில் தான், கடந்த ஒரு வார காலமாக ஏமனின் வடக்குப் பகுதியில் இருந்துகொண்டு, சவுதி அரேபியாவின் எல்லையை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இதன் ஒருபகுதியாக, சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசு வசம் இருந்த முக்கிய செங்கடல் துறைமுக நகரமான ஏமனின் மொகா (Mokha) நகர் ஹவுதி படையினரால் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, செங்கடலில் உள்ள முக்கியத் தீவான 'ஜுகார்' (Zuqar) தீவையும் ஏவுகணை தாக்குதல்கள் மூலம் ஹவுதி கைப்பற்றியது.
ஆப்பிரிக்காவையும் ஆசியாவையும் இணைக்கும் முக்கிய கடல்வழிப் பாதையான பாப் அல்-மந்தப் நீரிணை, மொகா நகரில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவிலேயே அமைந்துள்ளது. இதனால், மொகாவைக் கைப்பற்றிய ஹவுத்திப் படைகள் அடுத்ததாக பாப் அல்-மந்தப் நீரிணையையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் தான், பாப் அல்-மந்தப் நீரிணையை குறிவைத்து ஹவுத்திகள் சுமார் 18 மணி நேரம் தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தி வந்தன. இதன் முடிவில், பாப் அல் மந்தப் ஹவுதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது.
ஏமனுக்கும் ஜிபூட்டிக்கும் (Djibouti) இடையே அமைந்துள்ள இந்த குறுகிய கடல்வழி, செங்கடலை ஏடன் வளைகுடாவுடனும், அதன் வழியாக அரபிக்கடலையும் இணைக்கிறது. மேலும், சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பாவை ஆசியாவுடன் இணைக்கும் மிக முக்கியமான வர்த்தகப் பாதையாகும். இந்த பாதை வழியாக இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களைப் பெறுவதுடன், டீசல், விமான எரிபொருள், மருந்துகள், ஜவுளி, இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.
பாப் அல்-மந்தப் முடக்கத்தால், இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் கப்பல்கள் ஆப்பிரிக்க கண்டத்தைச் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். உதாரணமாக, மும்பையில் இருந்து நெதர்லாந்தின் ராட்டர்டாம் செல்லும் கடல் பயண தூரம் சுமார் 15,700 கிலோமீட்டரில் இருந்து 23,000 கிலோமீட்டராக அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.. இதனால் பயண நேரம் மட்டுமல்ல; எரிபொருள், கப்பல் கட்டணம் மற்றும் காப்பீட்டு செலவுகளும் அதிகரிக்கும்.
அதே நேரத்தில், கச்சா எண்ணெய் விலையும் உயர வாய்ப்புள்ளது. ஏற்கனவே பாப் அல்-மந்தப் தொடர்பான பதற்றச் செய்திகள் வெளியான நிலையில், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியிருந்தது. இந்த விலை உயர்வு நீடித்தால், இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரிக்கும். அதன் தாக்கம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகளிலும், ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் ஏற்படலாம். ஏற்கனவே ஹார்முஸ் நீரிணையிலும் நெருக்கடி நீடித்து வரும் நிலையில், பாப் அல்-மந்தப் பாதையும் முடக்கம் இந்தியாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.