செங்கடல் Reuters
உலகம்

இந்திய மாலுமிகள் மீது தாக்குதல்.. கடற்படையை களமிறக்குங்கள்.. பிரதமர் மோடிக்கு கோரிக்கை!!

சமீபத்தில் எம்.எஸ்.வி. ஃபைஸ் நூர் ஒலியா கப்பல் மூழ்கிய சம்பவத்தையடுத்து, FSUI அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, இந்தியக் கடற்படையை உடனடியாக களமிறக்குமாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

Premkumar S

செங்கடல் பகுதியில் இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் மீது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தாக்குதல்கள், இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்த கவலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இந்தச் சூழலில், இந்திய மாலுமிகளின் உயிரையும், இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், அப்பகுதியில் இந்தியக் கடற்படையை உடனடியாக களமிறக்க வேண்டும் என்று இந்திய மாலுமிகள் முன்னேற்றச் சங்கம் (FSUI), பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

மோடி

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் தொடங்கிய போர் 5 மாதங்களைக் கடந்தும் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. இப்போரின் காரணமாக உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணை ஏற்கனவே முடங்கியிருக்கும் நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சிக் குழு, கடந்த ஜூலை 20-ஆம் தேதி சவூதி அரேபியாவுக்கு எதிராக கடற்படை முற்றுகையை அறிவித்தது. இதையடுத்து, செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தப் நீரிணை வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்தச் சூழலில்தான், நேற்று இந்தியக் கொடியுடன் பயணித்த எம்.எஸ்.வி. ஃபைஸ் நூர் ஒலியா என்ற சரக்குக் கப்பல் செங்கடல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகி கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த 13 இந்திய மாலுமிகள் உள்பட 14 பேரும் ஏமன் கப்பற்படையால் பத்திரமாக மீட்கப்பட்டாலும், இந்தச் சம்பவம் இந்திய கடல்சார் பாதுகாப்பு குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து, இந்திய மாலுமிகள் முன்னேற்றச் சங்கமான எப்.எஸ்.யு.ஐ (FSUI) பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், செங்கடல், பாப்-அல்-மந்தப் நீரிணை, ஹார்முஸ் நீரிணை மற்றும் கருங்கடல் உள்ளிட்ட முக்கிய கடல் வழித்தடங்கள் தற்போது மிகவும் ஆபத்தான பகுதிகளாக மாறிவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

செங்கடல்

தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் இந்திய மாலுமிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும், இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் மட்டுமின்றி வெளிநாட்டு கப்பல்களில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் சங்கம் எச்சரித்துள்ளது. எனவே, இந்த ஆபத்தான கடல் வழித்தடங்களில் இந்தியக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், இந்தியக் கடற்படையை உடனடியாக அதிகளவில் களமிறக்க வேண்டும் என்றும், பாதுகாப்புக் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.