இஸ்ரேல் படைகள் பெய்ரூட்டின் மத்தியப் பகுதிகள் மற்றும் தெற்கு லெபனான் மீது கிட்டத்தட்ட 100 இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இதில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதுடன், 700-க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்தும் நடைபெற்றது. இறுதியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”ஹார்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் ஒட்டுமொத்த ஈரானும் ஓர் இரவுக்குள் அழிக்கப்படும்” என 48 மணி நேர கெடு விதித்திருந்தார். ஆனாலும் ஈரான் பிடிவாதம் காட்டியது. இதற்கிடையே பாகிஸ்தான் இருதரப்பிலும் மத்தியஸ்தம் செய்தது. கெடு முடிய சரியாக, 90 மணிநேரம் இருந்த நிலையில், இருதரப்பும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தன. கூடவே, ஈரான் 10 அம்ச திட்டங்களையும் வலியுறுத்தி இருந்தது. அதில், லெபனான் - காஸா - ஏமன் மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனே நிறுத்த வேண்டும் என்பதையும் கோரியிருந்தது. அமெரிக்கா அதை பரிசீலனை செய்வதாக கூறியிருந்தது. அதேநேரத்தில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்தத்தை ஆதரித்ததுடன், லெபனான் ஹிஸ்புல்லா மீதான தாக்குதல் இந்த உடன்படிக்கையில் பொருந்தாது என திட்டவட்டமாக கூறியிருந்தார்.
மேலும், இஸ்ரேல் படைகள் பெய்ரூட்டின் மத்தியப் பகுதிகள் மற்றும் தெற்கு லெபனான் மீது கிட்டத்தட்ட 100 இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இதில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதுடன், 700-க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், லெபானான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிம் குறிவைத்துக் கொல்லப்பட்டிருப்பதாகவும், அவருடைய தனிப்பட்ட செயலாளரும், அவரது மருமகனுமான அலி யூசுப் கர்ஷியும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதலைத் தொடர்வதை அடுத்து, அதற்குப் பதிலடியாக ஈரான் மீண்டும் ஹார்முஸ் நீரிணைப் பாதையை மூடியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது, போர் ஒப்பந்தத்தை மீறப்படுவதாகக் கூறப்படும் நிலையில், அடுத்தகட்டமாக அமெரிக்கா, இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் நிலவுகிறது. அதேநேரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு இது புது தலைவலியை உருவாக்கி இருக்கிறது. தற்போதைக்கு இந்த விஷயத்தில் 3 வழிகளே உள்ளன.
ஒன்று, ஈரானுக்கு எதிராக போரை மீண்டும் தொடங்குவது, மற்றொன்று பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தை நம்புவது, இறுதியாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைக் கட்டுப்படுத்துவது ஆகும். இதில், இஸ்ரேல் எந்த விஷயத்திலும் பின்வாங்காது என்று கூறப்படுகிறது. அது, ஈரானின் அணு மற்றும் ஏவுகணைத் திறன்களை முற்றிலுமாகச் செயலிழக்கச் செய்வதிலும் ஹிஸ்புல்லா அமைப்பை முற்றிலுமாக அழிப்பதிலுமே குறியாக உள்ளது. ஏற்கெனவே இந்த நடவடிக்கைகளை வைத்துத்தான் இஸ்ரேல் அமெரிக்காவை ஈரான் போருக்குள் தூண்டியது. இதன் காரணமாகவே அதிபர் ட்ரம்புக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. ஆகையால், லெபனான் விஷயத்தில் இஸ்ரேல் கொஞ்சமும் கருணை காட்டாது என்றே வல்லுநர்கள் நம்புகின்றனர்.