இஸ்ரேல் - ஹமாஸ் எக்ஸ் தளம்
உலகம்

விடுவிக்கப்பட வேண்டிய 8 பிணைக்கைதிகள் உயிரிழப்பா? ஹமாஸ் சொல்வது என்ன?

ஹமாஸ் வசம் இருந்த 33 பிணைக்கைதிகளில் 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 26 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும். ஆனால், இதில் 8 பேர் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னை என்பது இன்று நேற்றல்ல.. பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இதில் காஸாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக, அடுத்த ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை செய்யவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஹமாஸ் படையினர் முதற்கட்டமாக, தங்கள் வசம் இருந்த 3 பணயக் கைதிகளை விடுவித்தனர். பதிலுக்கு இஸ்ரேலும் 90 பாலஸ்தீனர்களை விடுவித்தது. இதைத் தொடர்ந்து, இன்று (ஜன.25) இரண்டாவது கட்டமாக, இஸ்ரேல் ராணுவத்தின் கண்காணிப்புப் படைப் பிரிவைச் சோ்ந்த கரீனா அரியெவ், லிரி அல்பாக், நாமா லெவி, டேனியல்லா கில்போவா ஆகிய 4 பிணைக்கைதிகளை விடுவித்தது.

இதற்குப் பதிலாக இஸ்ரேல் தங்கள் வசமிருந்த 200 பாலஸ்தீனிய ஆண் கைதிகளை விடுவித்தது. என்றாலும், பணயக்கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற இஸ்ரேலிய பெண்ணை ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்யவில்லை.

இதையடுத்து, அர்பெல் யாஹுட் விடுதலை செய்யப்படும்வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேவேளை, பணயக்கைதி அர்பெல் யாஹுட் உயிருடன் இருப்பதாகவும், பிப்ரவரி 1ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஹமாஸ் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது. எனினும், அர்பெல் விடுவிக்கப்படும் வரை, வடக்கு காஸாவுக்குள் பாலஸ்தீனா்களை அனுமதிக்கப்போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஹமாஸ் வசம் இருந்த 33 பிணைக்கைதிகளில் 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 26 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும். ஆனால், இதில் 8 பேர் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அரசின் செய்தித் தொடா்பாளா் டேவிட் மென்சா், “போா் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல்கட்ட அமலாக்கத்தின்போது ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்படும் 33 பிணைக் கைதிகளின் நிலை குறித்த முழு விவரங்களை அந்த அமைப்பினா் இஸ்ரேலிடம் அளித்துள்ளனா்.

அதில், குறிப்பிட்ட 33 பேரில் எட்டு போ் கொல்லப்பட்டுவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், விடுவிக்கப்படும் 33 பிணைக் கைதிகளில் 25 போ் மட்டுமே உயிருடன் உள்ளனா். இந்த விவரம், ஏற்கெனவே இஸ்ரேல் உளவுத் துறை சேகரித்திருந்த தகவல்களுடன் ஒத்துப்போகிறது” எனத் தெரிவித்துள்ளார். விடுவிக்கப்படும் பிணைக் கைதிகள் 33 போ் என்று டேவிட் மென்சா் குறிப்பிட்டாலும், அவா்களில் ஏழு போ் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.