ஒப்பந்தத்தை மீறிய ஹமாஸ்.. குற்றச்சாட்டு வைத்த இஸ்ரேல்.. காரணம் என்ன?
இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னை என்பது இன்று நேற்றல்ல.. பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இதில் காஸாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக, அடுத்த ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை செய்யவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஹமாஸ் படையினர் முதற்கட்டமாக, தங்கள் வசம் இருந்த 3 பணயக் கைதிகளை விடுவித்தனர். பதிலுக்கு இஸ்ரேலும் 90 பாலஸ்தீனர்களை விடுவித்தது. இதைத் தொடர்ந்து, இன்று (ஜன.25) இரண்டாவது கட்டமாக, இஸ்ரேல் ராணுவத்தின் கண்காணிப்புப் படைப் பிரிவைச் சோ்ந்த கரீனா அரியெவ், லிரி அல்பாக், நாமா லெவி, டேனியல்லா கில்போவா ஆகிய 4 பிணைக்கைதிகளை விடுவித்தது. இதற்குப் பதிலாக இஸ்ரேல் தங்கள் வசமிருந்த 200 பாலஸ்தீனிய ஆண் கைதிகளை விடுவித்தது.
என்றாலும், பணயக்கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற இஸ்ரேலிய பெண்ணையும் ஹமாஸ் ஆயுதக்குழு இன்று விடுதலை செய்ய வேண்டுமென இஸ்ரேல் தெரிவித்திருந்தது. ஆனால், அர்பெல் யாஹுட்டை ஹமாஸ் ஆயுதக்குழு இன்று விடுதலை செய்யவில்லை. இதையடுத்து, அர்பெல் யாஹுட் விடுதலை செய்யப்படும்வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தப்படி அர்பெல் யாஹுட் இன்று விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அர்பெல் யாஹுட்டை ஹமாஸ் விடுதலை செய்யவில்லை. இதையடுத்து, ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. அதேவேளை, பணயக்கைதி அர்பெல் யாஹுட் உயிருடன் இருப்பதாகவும், பிப்ரவரி 1ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஹமாஸ் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது.