Nepal Flood ANI
உலகம்

“தெய்வத்திற்கு வியர்வை வந்தது” நேபாள பேரிடரை கணித்த அம்மன்? பின்னணி என்ன?

நேபாளில் நடந்த தெய்வீக அதிசயம் பற்றி அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

இமயமலையில் இருந்த மிகப்பெரிய பனிப்பாறை உருகி, கோஷி ஆற்றில் கலந்ததால், நோபாளத்தில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இயற்கையின் இந்த கோரத்தாண்டவத்தால் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விபத்து எப்படி நடந்தது? இதற்கான உண்மையான காரணம் என்ன? இதனை ஏன் முன்கூட்டியே கணிக்கவில்லை என்று பல்வேறு விவாதங்கள் தொடர்ச்சியாக நடந்து வரும் வேளையில், இந்த விபத்தை கடவுளே கணித்து, மக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டார் என்ற தகவல் பரவி வருகிறது. அதாவது, நேபாளத்தின் பஞ்ச்கல் பகுதியில், பலஞ்சோக் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

இது அங்குள்ள மிக முக்கியமான ஆன்மீகத் தலமாகும். கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி மாலை நேரத்தில் பூஜைகள் நடந்தபோது, பகவதி அம்மன் சிலையில் வியர்வை துளிகள் போன்ற ஈரப்பதம் இருந்ததை பக்தர்கள் கவனித்துள்ளனர். பொதுவாக இந்த அம்மன் சிலைக்கு வியர்த்தால், ஏதோ ஒரு பெரிய இயற்கை பேரிடரோ, நெருக்கடியோ ஏற்படப்போகிறது என்பது உள்ளூர் மக்களின் நீண்டகால நம்பிக்கையாகும்.

Nepal Flood

இதனால் அச்சமடைந்த மக்கள், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க தெய்வத்திடம் மன்னிப்பு கோரும் வகையில் கோவிலில் உடனடியாக பூஜை நடத்தியுள்ளனர். சிலைக்கு வியர்த்ததாகக் கூறப்பட்ட நிகழ்வு நடந்து, சரியாக நான்கு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஆகஸ்ட் 26-ஆம் தேதி, நேபாளத்தில் பயங்கரமான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த சிலைக்கு வியர்ப்பதாக கூறப்படுவது முதல் முறையல்ல.

உள்ளூர் மக்கள் சமூக வலைதளங்களில் கூறிய தகவல்களின்படி, இதற்கு முன்பு 1974, 1987 ஆகிய ஆண்டுகளில் நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டபோதும், 2001-ஆம் ஆண்டு அன்று, நேபாள ராஜ குடும்ப படுகொலை சம்பவத்திற்கு முன்பும் இதேபோல அம்மன் சிலைக்கு வியர்த்ததாகக் கூறப்படுகிறது.

Nepal Flood

அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே தற்போதும் அசம்பாவிதம் நடக்கப்போவதை அம்மன் முன்கூட்டியே உணர்த்தியதாக மக்கள் கருதுகின்றனர்.

ஆகஸ்ட் 22-ல் சிலைக்கு வியர்த்ததும், ஆகஸ்ட் 26-ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் தற்செயலான நிகழ்வுகளாக இருந்தாலும், உள்ளூர் மக்களின் மனதில் உறைந்துள்ள அந்தப் பழங்கால நம்பிக்கையை இந்த சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றின்படி, பனிப்பாறைகள் உருகியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.