டிரம்ப் மற்றும் மசூத் பெசெஷ்கியன் கையெழுத்திட்ட அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் உலகளவில் கலவையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. ஈரான், யுரேனியம் இருப்பை வெளியே அனுப்பமாட்டோம், ஏவுகணை திட்டம் பேச்சுவார்த்தைக்கு வராது என வலியுறுத்துகிறது. அமெரிக்க குடியரசுக் கட்சியில் பிளவு; பாகிஸ்தான், பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகியவை ஒப்பந்தத்தை வரவேற்று, ஹார்முஸ் நீரிணை திறப்பு, எரிசக்தி விலை குறைப்பு போன்ற பலன்களை எதிர்நோக்குகின்றன.
பிப்ரவரி 28ஆம் தேதியன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதன் மூலம் இந்தப் போர் தொடங்கியது. ஏப்ரல் 8 அன்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதும் தாக்குதல்கள் தொடர்ந்தவாறே இருந்தது.
இந்நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையிலான போரை நிரந்தரமாக நிறுத்தும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மின்னணு முறையில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் குறித்து உலக நாடுகள் கூறியது என்ன? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்..
ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகாய் (Esmaeil Baghaei), அமெரிக்கா ஒப்பந்த விதிகளைப் பின்பற்றுவதை ஈரான் எந்தவிதத் தளர்வுமின்றி கண்காணிக்கும் என்றும், அமெரிக்கா தனது கடமைகளைத் தவறவிட்டால் ஈரான் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்றும் கூறியுள்ளார்.
மேலும், 60 நாள் காலக்கெடுவின் போது ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் அமெரிக்கத் தடைகளை நீக்குவது குறித்து விவாதிக்கப்படும் என்றும், ஆனால் பேச்சுவார்த்தைகளில் ஈரானின் ஏவுகணைத் திட்டம் இடம்பெறாது என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், ஈரான் தனது உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை வெளிநாடுகளுக்கு அனுப்பாது என்றும், ஈரானுடனான ஒப்பந்தக் கடமைகளை இஸ்ரேல் மதிக்குமாறு கட்டாயப்படுத்த வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு உண்டு என்றும் அவர் கூறினார். மேலும், ஓமன் நாட்டுடன் இணைந்து ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) நிர்வகிப்பதற்கான புதிய நடைமுறை ஒன்றை ஈரான் இறுதி செய்யும் என்றும், அதில் அப்பகுதியில் வழங்கப்படும் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தம் குறித்து டிரம்பின் சக குடியரசுக் கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தம் பில்லியன் கணக்கான டாலர் வரி செலுத்துவோர் பணத்தை வீணடிக்கிறது என்றும், ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறிதும் உதவவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும், சில குடியரசுக் கட்சியினர் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் ரோஜர் மார்ஷல், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பாராட்டியுள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்தார். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இப்பகுதி முழுமைக்கும் மேம்பட்ட புரிதல், பரஸ்பர மரியாதை மற்றும் கூட்டு வளம் ஆகியவற்றிற்கான ஒரு நிலையான அடித்தளமாக அமையட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் நீடித்த அமைதிக்கு வழிவகுப்பதோடு, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் அனுமதிக்கிறது. இது நமது நாட்டு மக்களுக்குச் சரியான திசையில் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் இது விரைவில் எரிசக்தி விலைகளைக் குறைக்க உதவும் என்று பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தானதை வரவேற்பதாகவும், வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளை இரு நாடுகளும் நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் அணுகும் என்று நம்புவதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.