நேபாள வெள்ளப் பேரழிவின் மத்தியில் சியாப்ருபேசி பகுதியில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுமி மனிஷாவை, பூனை சத்தம் போன்ற ஒலி வழியாக கண்டுபிடித்த மீட்புக் குழுவினர், இரண்டு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
ருஸ்வா மாவட்டத்தில் உள்ள சியாப்ருபேசி பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது இடிபாடுகளுக்கு அடியில் பூனை ஒன்று சிக்கியிருப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பகுதியைத் தீவிரமாகத் தேடிய மீட்புக் குழுவினர், இடிபாடுகளை அகற்றத் தொடங்கினர்.
நேபாள ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி சஞ்சு காட்ரி கூறுகையில், இடிபாடுகளை அகற்றியபோது அதற்குள் சிக்கியிருந்த மனிஷா உயிருடன் இருப்பது தெரியவந்ததாக தெரிவித்தார். சிறுமியை மீட்க சுமார் இரண்டு மணி நேரம் போராடிய குழுவினர், இறுதியாக அவரை உயிருடன் வெளியே கொண்டு வந்தனர்.
மனிஷா உயிருடன் இருந்தபோதிலும், அப்போது மிகவும் பலவீனமாகவும், சுயநினைவு குறைந்த நிலையிலும் இருந்தார். அவரை உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மீட்புக் குழுவினர் முயன்றனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மூலம் அவரை அங்கிருந்து வெளியேற்ற முடியவில்லை.
இதையடுத்து, சிறுமியை மீட்புப் படையின் முகாமுக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. சிறிது நேரத்தில் மனிஷாவுக்கு சுயநினைவு திரும்பியதும், அரிசி கஞ்சி வழங்கப்பட்டது.
வெள்ளப் பேரழிவால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்த மனிஷா, சனிக்கிழமை பிற்பகல் ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவில் உள்ள டீச்சிங் மருத்துவமனையின் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தற்போது மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலின்படி, மனிஷாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை நல்ல பலனைத் தருகிறது என்றும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவர் ஆரோக்கியம் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடிபாடுகளுக்குள் இரண்டு நாட்கள் சிக்கியிருந்த 5 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டு, தற்போது பெற்றோருடன் மீண்டும் இணைந்திருப்பது நேபாள வெள்ளப் பேரழிவுக்கு மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.