ஜார்ஜ் சோரோஸ், ஜியோர்ஜியா மெலோனி x page
உலகம்

"ஜார்ஜ் சொரோஸ் அரசியல் தலையீட்டில் ஈடுபடுகிறார்" - இத்தாலி பிரதமர்

"ஜார்ஜ் சொரோஸ் அரசியல் தலையீட்டில் ஈடுபடுகிறார்" என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.

Prakash J

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, அதானி விவகாரத்தை காங்கிரஸ் எழுப்பியபோது, அதற்கு எதிராக ஜார்ஜ் சோரோஸ் பெயரைக் குறிப்பிட்டு அமளியில் ஈடுபட்டது பாஜக. இதனால், அவைகள் முடங்கின. ஜார்ஜ் சோரோஸ் அறக்கட்டளை வாயிலாக, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு தொடர்புடைய அமைப்புக்கு நன்கொடை வழங்கப்பட்டதாக மக்களவையில் பாஜக குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

ஜார்ஜ் சோரோஸ்

இந்த சோரோஸ் மிகப் பிரபலமான அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர் மற்றும் முதலீட்டாளராக அறியப்படுகிறார். பல நாடுகளை இலக்காக வைத்து, அந்த நாடுகளின் அரசியலில் திரைமறைவாகச் செயல்பட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதாவது, தன்னுடைய, 'ஓபன் சொசைட்டி பவுண்டேஷன்' அறக்கட்டளை வாயிலாக, உலகின் பல நாடுகளுக்கும், ஜார்ஜ் சோரோஸ் நன்கொடை வழங்கி வருகிறார்.

ஜனநாயக நடவடிக்கைகளுக்கான நிதி என்ற பெயரில், அந்த நாடுகளின் தேர்தல் நடைமுறைகளில் அவர் தலையிடுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதற்காக ஓராண்டில் மட்டும் அவர் ரூ.12,000 கோடி வரை செலவிடுவதாகவும், இந்தியா உட்பட 120 நாடுகளின் அரசியலில் அவர் தலையிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, அமெரிக்காவின் மிகவும் உயரிய சிவிலியன் விருதான, 'மெடல் ஆப் ஃப்ரீடம்' எனப்படும் சுதந்திர விருது அவருக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது. இதன் பின்னணியில் அவர் அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியை ஆதரித்தும், குடியரசு கட்சியை (டொனால்டு ட்ரம்ப்) அடிக்கடி விமர்சித்தும் வருவது கூறப்பட்டது. விரைவில் பதவியிலிருந்து ஓய்வுபெற இருக்கும் பைடன் அவருக்கு இந்த விருதை அளித்துள்ளதால், அறிவிப்பு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக குடியரசுக் கட்சி மற்றும் ட்ரம்ப்பின் ஆதரவாளர் எலான் மஸ்க் இதைக் கடுமையாக எதிர்த்திருந்தார்.

ஜியோர்ஜியா மெலோனி

இந்த நிலையில், “ஜார்ஜ் சொரோஸ் மற்ற நாடுகளின் உள்நாட்டு அரசியலில் தலையிடுகிறார். அந்த நாடுகளின் ஆட்சி கவிழ்ப்புக்கு தனது பணத்தை பயன்படுத்துகிறார். இது, ஆபத்தான தலையீடு. ஐரோப்பாவின் அரசியலில் வெளிநாட்டினர் நீண்டகாலமாகவே தலையிடுகின்றனர்” என இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி குற்றஞ்சாட்டியுள்ளார். அவருடைய இந்தக் குற்றச்சாட்டு ஐரோப்பிய நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி டொனால்டு ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்கிற்கு ஆதரவுக் கரம் நீட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.