செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தில் பல கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் இதுவரை 1,114 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சீனாவில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 1,130 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4,462 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 800-க்கும் அதிகமான வெளிநாட்டினரும் உள்ளனர்.
பேரழிவு நிகழ்ந்து ஒரு வாரம் கடந்தும் பலரின் உடல்கள் கிடைக்காததால், உறவினர்கள் வேதனையுடன் உருவப்பொம்மைகளை எரித்து இறுதிச்சடங்குகளை நடத்தத் தொடங்கியுள்ளனர்.
வெள்ளத்தில் காணாமல் போன தனது கணவர் டோல்மா நெவார் தமாங், சீனா நோக்கிச் சென்றபோது பேரழிவில் சிக்கியதாகவும், தொடர்ந்து தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் பதில் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்ற நம்பிக்கையில், வேறு வழியின்றி தர்பைப் புல்லால் செய்யப்பட்ட உருவப்பொம்மையை எரித்து இறுதிச்சடங்கு செய்ததாக அவர் கூறினார்.
இதற்கிடையே, நீர்மின் நிலையங்களின் சுரங்கங்களில் தேங்கியுள்ள சேற்றைத் தோண்டியும், துளையிட்டும், வெடிபொருட்களைப் பயன்படுத்தியும் மீட்புப் படையினர் தேடுதல் நடத்தி வருகின்றனர். இதுவரை இறந்த உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டாலும், யாரேனும் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் தேடுதல் தொடர்வதாக வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கனால் தெரிவித்துள்ளார்.
சவக்கிடங்குகள் நிரம்பியுள்ள நிலையில், அடையாளம் காணப்படாத உடல்களிடம் இருந்து DNA மாதிரிகளைச் சேகரித்த பின்னர் அதிகாரிகள் அவற்றை அடக்கம் செய்தும் வருகின்றனர்.