ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஜூன் மாத இறுதியில் வீசிய வரலாறு காணாத கடும் வெப்ப அலையால், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து புதிய தலைமுறையின் கலநிலை அணி வழங்கும் தொகுப்பைப் பார்க்கலாம்.
கடந்த ஜூன் 22 முதல் 28 வரையிலான ஒரே வாரத்தில் மட்டும் ஐரோப்பாவில் மொத்தம் 10,650 கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர். இந்த வெப்ப அலையால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் அதிகாரப்பூர்வ இறப்பு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஜெர்மனியில் வெப்ப அலையின் கொடூரத்தால் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 120 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் சுமார் 2 ஆயிரத்து 700 பேர் வெப்பம் தொடர்பான காரணங்களால் உயிரிழந்துள்ளதாக லண்டன் இம்பீரியல் கல்லூரியின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. பிரான்ஸில் வெயிலின் தாக்கத்தால் 2 ஆயிரத்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். பெல்ஜியத்தில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிக மோசமான வெப்ப அலை மரண விகிதம் இதுவென பெல்ஜியம் சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. நெதர்லாந்தில் வெயிலின் கொடுமைக்கு 480 பேர் பலியாகியுள்ளனர். அதீத வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்படும் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் கடுமையான சுவாசக் கோளாறுகள் போன்ற பாதிப்புகளினாலேயே இந்த உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன.
ஆண்டின் இந்த காலகட்டத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மரணங்கள் பதிவாவது மிகவும் அசாதாரணமானது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மனிதர்களின் செயல்பாடுகளால் ஏற்படும் காலநிலை மாற்றமே இத்தகைய அதீத வெப்ப அலைகளுக்கு முக்கியக் காரணம் என்றும், இனிவரும் காலங்களில் இவை இன்னும் அடிக்கடி தீவிரமடையும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.