donald trump, xi jinping x page
உலகம்

"ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால்.." - சீனாவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!

சீனாவிற்கு 155% வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Prakash J

சீனாவிற்கு 155% வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிபராகப் பொறுப்பேற்றது முதல், ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், வர்த்தகரீதியாக அமெரிக்காவால் பல நாடுகள் ஆதாயம் அடைந்து வருவதாகவும், அதே அளவு பலன் அவர்களால் தங்கள் நாட்டிற்குக் கிடைக்கவில்லை என்றும் கூறிவந்த நிலையில், இந்தியா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக வரிவிதிப்பையும் மேற்கொண்டார். மேலும், பிற நாடுகள் தங்களுக்கு எந்த விகிதத்தில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதத்தில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (பரஸ்பர) வரி விதித்துள்ளார்.

xi jinping, donald trump

அந்த வகையில், ஆரம்பத்தில் சீன பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப்பட்டு, பின்னர் அது பேச்சுவார்த்தைக்குப் பின்பு 30% வரியாக அமலானது. இந்த நிலையில், அமெரிக்காவிற்கு அரிய கனிமங்கள் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடுகளை அதிகரித்தது. நவம்பர் 8 முதல், 17 அரிய மண் பொருட்களில் 12 பொருட்களுக்கு சீனா ஏற்றுமதி வரம்பை விதிக்கவுள்ளது. அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு விற்பனையாளரும் இவற்றை ஏற்றுமதி செய்ய முடியாது என்று அந்த நாடு அறிவித்துள்ளது.

அரிய மண் தாதுக்களின் பற்றாக்குறை அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பிரச்னைகளை உருவாக்கக்கூடும், ஏனெனில் அவை F-35 போர் விமானங்கள், பிரிடேட்டர் ட்ரோன்கள், வர்ஜீனியா மற்றும் கொலம்பியா வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்கள், டோமாஹாக் ஏவுகணைகள், ரேடார் அமைப்புகள் போன்றவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

donald trump, xi jinping

இதற்குப் பதிலடியாக சீன பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதலாக 100% வரிவிதித்தது. ஏற்கெனவே சீன பொருட்கள் மீது 30% வரி அமலில் இருக்கும் நிலையில், தற்போது மொத்தமாக சீனா மீது 130% வரி விதிக்கப்படுகிறது. ட்ரம்பின் இந்த அதிரடி முடிவால், உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர்ப் பதற்றம் புதிய உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. இதற்கிடையே, சீனாவுடன் சமையல் எண்ணெய் உள்ளிட்ட சில பொருட்கள் வர்த்தகத்தை நிறுத்துவது குறித்து பரிசீலிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவிலிருந்து சோயா பீனை வாங்குவதை சீனா நிறுத்தியுள்ளது. இது அமெரிக்க விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் ”அமெரிக்காவுடன் நியாயமான வணிக ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திடவேண்டும். இல்லாவிட்டால்அந்நாட்டுக்கு விதிக்கப்படும் வரி நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 155% ஆக உயர்த்தப்படும்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.