அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி காமேனியின் மரணம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன. தவிர, இன்னும் சில மூத்த தலைவர்களும் அதிகாரிகளும் கொல்லப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஈரான் ராணுவமும் பதிலுக்குத் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஈரான், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களைத் தாக்கியது. தற்போது இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தைத் தாக்கியிருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதை இஸ்ரேல் அரசு உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் படுகொலை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஏபிசி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தங்களைக் கொல்ல ஈரானின் சதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துள்ள ட்ரம்ப், “அவர் என்னைப் பிடிப்பதற்கு முன்பு நான் அவரைப் பிடித்தேன். அவர்கள் இரண்டு முறை முயற்சித்தார்கள். ஆனால், அதற்குள் நான் முதலில் அவரைப் பிடித்தேன்” என அந்தச் செய்தி நிறுவன செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும், அந்தப் பேட்டியில், “இந்த தாக்குதல் நான்கு முதல் ஐந்து வாரங்கள் நீடிக்கும். தேவைப்பட்டால் நீண்ட பிரசாரத்திற்கும் தான் தயாராக இருக்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.