அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப்வும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில், டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டொனால்டு ட்ரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவரது வலது காதின் மேல் துப்பாக்கிக் குண்டு உரசிச் சென்றது. அவரது காதில் இருந்து ரத்தம் கொட்டினாலும், நூலிழையில் ட்ரம்ப் உயிர் தப்பினார்.
அதேநேரத்தில், இத்தாக்குதலில் அவரது ஆதரவாளர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டின்போது, ஷான் கரன் என்ற பாதுகாவலர் ட்ரம்பின் உயிரைப் பாதுகாத்து அழைத்துச் சென்றார். அவருடன் மேலும் சில பாதுகாவலர்கள் அரணாக இருந்து அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக, அவரை தற்போது Secret Service என்ற அமைப்பின் இயக்குநராக ட்ரம்ப் நியமித்துள்ளார்.
“உயிரைப் பணயம்வைத்து, அவர் என்னை பாதுகாத்தார். இந்த நியமனத்தால் Secret Service அமைப்பு வலுவான அமைப்பாக உருப்பெறும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரகசிய சேவையில் 23 வருடங்களாகப் பணியாற்றி வரும் ஷான் கரன், அதிபர் ட்ரம்பின் முதல் பதவிக் காலத்தில் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.