2026-ஆம் ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு (52-ஆவது) பிரான்சின் எவியான் நகரில் நடைபெற்ற நிலையில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாட்டுத் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். இவர்களுடன் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியா, பிரேசில், கென்யா, எகிப்து மற்றும் தென் கொரியா ஆகிய நாட்டுத் தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இந்தியா சார்பில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டில், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி புகைப்படம் எடுக்கக் கெஞ்சியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருப்பது உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது. இத்தாலிய தொலைக்காட்சி சேனலான La7-க்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த ஒளிபரப்பு நிறுவனத்தின் மொழிபெயர்ப்பின்படி, "நான் அவரிடம் பேசியதில் அவர் அநேகமாக மகிழ்ச்சியாக இருப்பார். நான், அவரிடம் பேச வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர், என்னுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளும்படி கெஞ்சினார். அவர், என்னுடன் ஒரு புகைப்படம் எடுக்க மிகவும் விரும்பினார். நான் அதை எடுத்திருக்க மாட்டேன். ஆனால், அவர் மீது எனக்குப் பரிதாபமாக இருந்தது" என்று அவர் கூறியதாக La7-இன் மொழிபெயர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால், இதுகுறித்து அந்தத் தொலைக்காட்சி, நேர்காணலின் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்பை மட்டுமே வெளியிட்டது, அதன் அசல் ஆடியோவை வெளியிடவில்லை.
எனினும், இதுதொடர்பாக பதிலளித்த மெலோனி, ட்ரம்பின் கூற்றை வன்மையாக நிராகரித்ததுடன், அவர் அந்தக் கதையைத் திரித்துக் கூறியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர், ”டொனால்டு ட்ரம்பின் கூற்றுகள் முற்றிலும் புனையப்பட்டவை. நான் வெளிப்படையாகவே திகைத்துப்போனேன். அமெரிக்க அதிபர் ஏன் தனது நட்பு நாடுகளிடம் இப்படி நடந்துகொள்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும், இது முதல்முறையல்ல. மேற்கத்திய மற்றும் அமெரிக்காவின் எதிரிகளிடம் அவர் அதே உறுதியைக் காட்டாமல், மாறாக அவர்களின் தலைவர்களை மிகுந்த மென்மையுடன் நடத்துவது ஏமாற்றமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.