கியூபா எக்ஸ் தளம்
உலகம்

9 நாட்களில் 3ஆவது முறை.. இருளில் மூழ்கிய கியூபா.. பின்னணியில் அமெரிக்கா?

கியூபாவின் தேசிய மின் கட்டமைப்பு மீண்டும் செயலிழந்ததால், தீவு முழுவதும் முழுமையான மின் துண்டிப்பு ஏற்பட்டது.

Prakash J

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கியூபா. இந்நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால், அது பொருளாதார ரீதியாகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், கியூபாவின் தேசிய மின் கட்டமைப்பு மீண்டும் செயலிழந்ததால், தீவு முழுவதும் முழுமையான மின் துண்டிப்பு ஏற்பட்டது. கியூபாவின் தேசிய மின் கட்டமைப்பு நேற்று செயலிழந்ததாக எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, சுமார் 10 மில்லியன் மக்கள் வசிக்கும் அந்தத் தீவு, ஒன்பது நாட்களில் மூன்றாவது முறையாக பெரிய மின்வெட்டைச் சந்தித்தது. அமெரிக்கா விதித்த எண்ணெய்த் தடையால், அத்தீவின் ஏற்கெனவே பழைமையான எரிசக்தி உள்கட்டமைப்பு முடங்கியுள்ள நிலையில், அடிக்கடி மின்வெட்டுகள் ஏற்படும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. ஜனவரி 3 அன்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை, நாடு கடத்திய பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கியூபா மீது எண்ணெய்த் தடையை விதித்திருந்தார். முன்னதாக, வெனிசுலா கியூபாவின் முதன்மை எரிபொருள் வழங்குநராக இருந்துவந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு அதற்குத் தடைவிதிக்கப்பட்டது. தொடர்ந்து அமெரிக்க அழுத்தம் காரணமாக மெக்சிகோவும் கியூபாவிற்கான எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தியது.