உலகம் முழுவதும் இரண்டு புதிய வகை கொரோனா தொற்றுகள் பரவி வரும் நிலையில், அவை முந்தைய கோவிட் வகைகளைப்போல அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரியவந்துள்ளது.
2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. தவிர, பொருளாதாரச் சிக்கல்களையும் ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. அதன்பிறகே உலகம், கொரோனா எனும் கோரத் தாண்டவத்திலிருந்து மீளத் தொடங்கியது. எனினும், தற்போதும் ஒருசில நாடுகளில் திரிபுகள் பரவுவதாகவும் அதனால் பாதிப்புகள் உருவாவதாகவும் அவ்வப்போது ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உலகம் முழுவதும் இரண்டு புதிய வகை கொரோனா தொற்றுகள் பரவி வரும் நிலையில், அவை முந்தைய கோவிட் வகைகளைப்போல அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரியவந்துள்ளது. நிம்பஸ் (NB.1.8.1) மற்றும் ஸ்ட்ராடஸ் (XFG) எனப் பெயரிடப்பட்ட சமீபத்திய வகைகள், ஓமைக்ரானின் துணை வகைகளாகும். நிம்பஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டு, பின்னர் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் பரவியுள்ளது.
இதற்கிடையில், ஸ்ட்ராடஸ் வைரஸ், இங்கிலாந்தில் அடிக்கடி கண்டறியப்பட்டு வருகிறது. UK சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் கூற்றுப்படி, ’இது வேகமாக பரவக்கூடியவை. நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டுப்படாது என்றாலும் முந்தைய வகைகளைப்போல அதிக பாதிப்பை ஏற்படுத்தாது‘ என்று தெரிவிக்கிறது. நிம்பஸ் மனித உயிரணுக்களுடன் தன்னை இணைத்துக் கொள்வதில் மிகவும் சிறந்தது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். முந்தைய வகைகளைவிட, 2.5 மடங்கு அதிக திறன் கொண்டது. இது அதை அதிக அளவில் பரவும் தன்மையுடையதாக ஆக்குகிறது. அதேநேரத்தில், ஸ்ட்ராடஸ் சற்று வித்தியாசமாகச் செயல்படுகிறது. நிம்பஸைப்போல, இது மற்ற ஒமைக்ரான் வகைகளைவிட கடுமையான நோயை ஏற்படுத்தும் அறிகுறிகளைக் காட்டவில்லை. ஆனால் அதன் மறைமுகமான பரவல், குறிப்பாக குளிர் மாதங்களில், காய்ச்சல் பரவும்போது, மக்களை எதிர்பாராதவிதமாகப் பாதிக்கக்கூடும் என்கின்றனர்.
இதுகுறித்து UK சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனத்தின் (UKHSA) ஆலோசகர் டாக்டர் அலெக்ஸ் ஆலன், “இதுவரை கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில், இந்த வகைகள் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துகின்றன அல்லது தற்போதைய பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் அவற்றுக்கு எதிராக குறைவான செயல்திறன் கொண்டவை என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை”எனத் தெரிவித்துள்ளார்.