கனடாவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் 250 கனடா டாலர்கள் காசோலை வழங்குவதற்கான கொள்கை தொடர்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட்வுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் கருத்து தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ ”தனது அரசில் உயர்நிலை பொருளாதார ஆலோசகராக கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் இருப்பதில் தனக்கு விருப்பம் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இதனால், கனடாவின் நிதியமைச்சரும், துணைப் பிரதமருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் வருடாந்திர அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எழுதிய கடிதத்தில், ”கனடாவின் வளர்ச்சிப் பாதையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார். கிறிஸ்டியா ஃபிரீலேண்ட் பதவியை ராஜினாமா செய்தது, ட்ரூடோ அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இதையடுத்து, தனது நெருங்கிய வட்டாரத்தில் உள்ள டொமினிக் லிபிளான்க்கை (Dominic LeBlanc) புதிய நிதியமைச்சராக நியமித்து, பிரதமர் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
ஃப்ரீலேண்டின் ராஜினாமா எதிர்பாராதது. ஆனால் அவருடன் நேற்று மற்றொரு அமைச்சரவை சகாவான சீன் ஃப்ரேசரும் இணைந்துள்ளார். மொத்தத்தில், கனடாவில் இதுவரை ஐந்து கேபினட் அமைச்சர்கள் இந்த ஆண்டு ராஜினாமா செய்துள்ளனர், மேலும் நான்கு பேர் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளனர். தவிர, ”ட்ரூடோ மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை, அவருடைய சொந்த அமைச்சரவை அமைச்சர்கள்கூட அவரை நம்புவதற்குத் தயாராக இல்லை” என அவருக்கு எதிராக கிளர்ச்சி எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது, தற்போது 153 உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 60 ஆக உயர்ந்துள்ளது.