அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பு மற்றும் அறிவிப்புகளால் கனடா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளுக்கு இடையேயான அரசியல் களம் உலகம் முழுவதும் பேசுபொருளாகி வருகிறது. இதனால் இவ்விரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் நிலவலாம் எனக் கணிக்கப்படுகிறது.
ஏற்கெனவே, கனடாவில் உள்நாட்டு அரசியல் சிக்கலில் உள்ள நிலையில், அமெரிக்காவின் அடுத்தடுத்த அறிவிப்புகள் அந்நாட்டுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியும் விதிக்கப்பட்டது.
ஆனால், கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்த வரி விவகாரம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சீனாவில் இது தொடர்கிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியத்திற்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இது, கனடாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதற்குக் காரணம், கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு அதிக எஃகு இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கிருந்து, கடந்த ஆண்டு 50 சதவிகிதத்திற்கும் மேலாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனடாவின் இரும்பு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரி விதிப்பால் அமெரிக்கா வேலை இழப்பை சந்திக்க நேரிடும் என கனடா பிரதம ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார். இதுகுறித்து ட்ரூடோ, ”கனடா பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரிகளை விதித்தால், அதே அளவிற்கான வரிவிதிப்பை அமெரிக்க பொருட்கள் மீதும் விதிக்கப்படும். ட்ரம்ப் தனது முதலாவது ஆட்சிக் காலத்தில் கனடா பொருட்கள் மீது அதிக வரிவிதித்ததால் அமெரிக்காவில் சுமார் 75 ஆயிரம் பேர் வேலையை இழந்தனர். ட்ரம்ப்பின் தற்போதைய முடிவும் அமெரிக்காவின் வளர்ச்சி மற்றும் வளத்தை இழக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார்.