”ட்ரம்பின் ரத்தம் சிந்தப்பட வேண்டும்” என ஈரானின் மதகுருமார் ஒருவர் பேட்டி அளித்துள்ளார். ஈரானின் மூத்த ஷியா மதகுருக்களில் ஒருவரான ஆயத்துல்லா அப்துல்லா ஜவாடி அமோலி, இதுகுறித்து ஈரானின் அரசு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் தாக்குதலைத் தொடுத்தன. இந்த தாக்குதலில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை ஆட்சி புரிந்துவந்த அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இது, உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஈரான் அதிபர் பெசஷ்கியான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பதிலடி தராமல் ஓயமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான், ஈரான் தனது பதிலடி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஈரான், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தின. தற்போது அஜர்பைஜான் நாட்டின் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதையடுத்து வளைகுடா நாடுகளில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. தவிர, தாக்குதல் மேலும் தீவிரமடையும் எனவும், நீண்ட நாட்கள் தொடரும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், ”ட்ரம்பின் ரத்தம் சிந்தப்பட வேண்டும்” என ஈரானின் மதகுருமார் ஒருவர் பேட்டி அளித்துள்ளார். ஈரானின் மூத்த ஷியா மதகுருக்களில் ஒருவரான ஆயத்துல்லா அப்துல்லா ஜவாடி அமோலி, இதுகுறித்து ஈரானின் அரசு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், “நாம் இப்போது ஒரு பெரிய சோதனையின் விளிம்பில் இருக்கிறோம். இந்த ஒற்றுமையை முழுமையாகப் பாதுகாக்க, இந்த கூட்டணியை முழுமையாகப் பாதுகாக்க நாம் கவனமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ள அவர், அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிரான வன்முறைக்கும் அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "சியோனிச (இஸ்ரேல்) இரத்தம் சிந்தப்பட வேண்டும். ட்ரம்பின் இரத்தம் சிந்தப்பட வேண்டும். அடக்குமுறை அமெரிக்காவை எதிர்த்துப் போராடுங்கள், அவருடைய இரத்தம் என் தோள்களில் இருக்கிறது" என அவர் அதில் தெரிவித்துள்ளார். ஷியா இஸ்லாத்தின் மதகுருமார்களில் ஆயத்துல்லா என்பது மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றாகும், மேலும், ஈரானில் மத மற்றும் அரசியல் சொற்பொழிவுகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்ட டஜன் கணக்கான மூத்த மதகுருமார்கள் உள்ளனர்.