அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட'எப்ஸ்டின் ஆவணங்களில்' தனது பெயர்இடம்பெற்றது குறித்து, பில்கேட்ஸ் தனது அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் என உலகின் செல்வாக்குமிக்க மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019ஆம் ஆண்டில், சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தனது செல்வாக்கையும் பணத்தையும் பயன்படுத்தி சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அவர் கைது செய்யப்பட்ட சில வாரங்களிலேயே, நியூயார்க் சிறையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தற்கொலை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணம் உலகளவில் பல மர்மங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியது. கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்க புலனாய்வாளர்கள் எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், தொடர்புப் பட்டியல்கள், விமானப் பயணப் பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் எனப் பெருமளவிலான தரவுகளைச் சேகரித்தனர். இவைதான் இப்போது, 'எப்ஸ்டீன் கோப்புகள்' என்று அழைக்கப்படுகின்றன. சமீபத்தில், அமெரிக்க நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த ஆவணங்களின் புதிய தொகுப்பு பொதுவெளியில் வெளியிடப்பட்டது.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செல்வாக்குமிக்க நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இது, உலகளவில் புயலைக் கிளப்பி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட'எப்ஸ்டின் ஆவணங்களில்' தனது பெயர்இடம்பெற்றது குறித்து, பில்கேட்ஸ் தனது அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். எப்ஸ்டினுடன் நேரத்தைச் செலவிட்டதும், அதிகாரிகளைச் சந்திப்புகளுக்கு அழைத்துச் சென்றதும் தனது வாழ்வின் மிகப்பெரிய தவறு என அவர் ஒப்புக்கொண்டார். எப்ஸ்டினின் சட்டவிரோதச் செயல்களில் தமக்குத் தொடர்பில்லை என்றும், எப்ஸ்டின் மூலமாக ஏற்பட்ட ரஷ்யப் பெண்களுடனான ரகசியத் தொடர்புகள் பாலியல் வன்கொடுமை சார்ந்தவை அல்ல என்றும் அவர் விளக்கமளித்தார். இந்த விவகாரத்தால் இந்தியாவில் நடைபெற்ற ஏஐ மாநாட்டையும் அவர் தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.